கணவர் பாதுகாப்பு சட்டம் கொண்டுவருவோம்: சுயேட்சை வேட்பாளர் வாக்குறுதி
அகமதாபாத்: தேர்தல் வந்துவிட்டால் போதும் வேட்பாளர்களின் வாக்குறுதிகள் வண்ணமயமாய் வாக்காளர்களின் கதவுகளை தட்டும். குஜராத் மாநிலத்தில் ஒரு வேட்பாளர் கொடுத்த வாக்குறுதி இருக்கிறதே கொஞ்சம் வித்தியாசமானதுதான்.
எனக்கு ஓட்டு போட்டால் மனைவியிடம் அடிவாங்கும் கணவரை பாதுகாப்போம் என்று ஆண்களை டச் செய்யும் வகையில் வாக்கு சேகரித்து வருகிறார் ஒரு சுயேட்சை வேட்பாளர்.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஒரு சுயேட்சை வேட்பாளர் சொல்லும் வாக்குறுதிகளும் அப்படித்தான் உள்ளது. ஆமதாபாத் கிழக்கு தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் தஷ்ரத் தேவ்தா என்பவர், மனைவியால் அடித்து- உதைத்து தாக்கப்படும் கணவரை காப்பாற்றுவோம். அதற்கு ஏற்ப ‘‘கணவர் பாதுகாப்பு சட்டம்'' கொண்டு வருவோம் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.
வீதி, வீதியாக சென்று அவர் பெண்களிடம் அடிபடும் கணவர்களே உங்களைப் பாதுகாக்க நான் இருக்கிறேன் என்று ‘மைக்'கில் பேசி வருகிறார். இதனால் பெரும்பாலான ஊர்களில் அவரை பெண்கள் முறைத்து பார்த்து விட்டுச் செல்கிறார்களாம்.
தேர்தல் வந்து விட்டால், மக்களுக்கு கொடுக்கப்படும் வாக்குறுதிகளுக்கு பஞ்சமே இருக்காது. தேர்தல் நேரத்தில் பேசப்படும் வாக்குறுதிகளில் பெரும்பாலனவற்றை மக்கள் மட்டுமின்றி, அரசியல்வாதிகளும் மறந்து விடுவார்கள். எனவேதான் இப்போதெல்லாம் தேர்தலில் வேட்பாளர்கள் சொல்லும் வாக்குறுதிகளை வாக்காளர்கள் நம்புவுவதும் இல்லை. கண்டு கொள்வதும் இல்லை.
அந்த தைரியத்தில் இந்த சுயேட்சை வேட்பாளர் தன்னிஷ்டத்திற்கு வாக்குறுதியை அள்ளி வீசிவருகிறார்.