கபிணி அணை விரிசலால் கிராமங்களுக்குப் பாதிப்பில்லை - கர்நாடகம் உறுதி
மைசூர்: கர்நாடக மாநிலத்தின் முக்கிய அணையும், மேட்டூர் அணைக்கு நீர் தரும் முக்கிய காவிரி அணையுமான கபிணி அணையில் ஏற்பட்டுள்ள விரிசலால் எந்தப் பாதிப்பும் வராது என்று கர்நாடக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
40 ஆண்டு கால பழமை வாய்ந்த அணை கபிணி அணை. கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தில் இந்த அணை உள்லது கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் தான் கபினி அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாகும். அங்கு பெய்யும் மழையால் கபிணி அணைக்கு நீர் வரும்.
இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் நீர், மண்டியா, குடகு, சாம்ராஜ்நகர், மைசூர் உள்ளிட்ட 4 மாவட்ட மக்களின் குடிநீருக்கும், விவசாய பாசனத்திற்கும் உயிர்நாடி ஆகும். மேலும் இந்த அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீர், பண மரம் மற்றும் மானந்தவாடி ஆறுகளில் கலந்து, மைசூர் மாவட்டம் டி.நரசிப்புராவில் காவிரி ஆற்றில் சங்கமம் ஆகிறது. பின்னர் அந்த நீர் தமிழ்நாட்டிற்கு செல்கிறது. இதனால் கபினி அணை தமிழக விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாகவும் திகழ்கிறது.
வயநாட்டில் பருவ மழை
தற்போது கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர் மட்டமும் கிடுகிடு என உயர்ந்தது.
கொள்ளளவை எட்டியது
கடந்த 20-ந்தேதி அணை தனது முழுகொள்ளளவையும் எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சுற்றுச்சுவரில் விரிசல்
இந்த நிலையில் அணையின் சுற்றுச்சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த விரிசல் வழியாக அணையிலிருந்து நீர் கசிந்து கொண்டிருக்கிறது.
அணைக்கு விநாடிக்கு
தற்போது அணைக்கு சராசரியாக வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் கரையோர கிராமமக்கள் அணை உடைந்துவிடுமோ என்ற பீதி அடைந்துள்ளனர்.
பீதியில் கிராம மக்கள்
குறிப்பாக பீதரஹள்ளி, பீச்சனஹள்ளி, சரகூறு, நஞ்சன்கூடு, டி.நரசிப்புரா, எச்.டி.கோட்டை, கொள்ளே கால் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். இதுபற்றி அணையின் கரையோர கிராமமக்கள் கூறியதாவது:
பராமரிப்பு சரியில்லை
மைசூர், மண்டியா, சாம்ராஜ்நகர், குடகு ஆகிய 4 மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் கபினி அணையை கர்நாடக நீர்ப்பாசனத் துறையினர் சரியான முறையில் பராமரிப்பதில்லை. இதனால் தற்போது அணையின் சுற்றுச்சுவரில் செடி, கொடிகள் வளர்ந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அணை தனது முழுகொள்ளளவை எட்டியது. அதைதொடர்ந்து அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
விபரீதம் நேருமோ
இருந்தாலும் அணைக்கு தினமும் நீர்வரத்து தொடர்ந்து அதிகளவில் வந்து கொண்டிருக்கிறது. இதனால் விரிசல் காரணமாக ஏதாவது விபரீதம் நிகழுமோ என்ற அச்சத்தில் உள்ளோம். எனவே அணையில் ஏற்பட்டுள்ள விரிசலை சரிசெய்ய கர்நாடக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிகாரியின் நம்பிக்கை
இருப்பினும் அணைக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கபிணி அணையின் நீர் அளவீட்டு அதிகாரி நாகராஜ் என்பவர் கூறியுள்ளார். அவர் கூறுகையில், "கபினி அணை 40 ஆண்டு காலம் பாரம்பரியம் கொண்டது. தற்போது அணையின் சுற்றுச்சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் ஏதோ விபரீதம் ஏற்படுவதாக சிலர் வீண் வதந்திகளை பரப்பிவிட்டனர். இந்த விரிசல் கடந்த 8 ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. சுவரில் வளர்ந்துள்ள செடி, கொடிகளால்தான் அந்த விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த விரிசலால் அணைக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை.
பீதி வேண்டாம்
இந்த விரிசல் பற்றி ஏற்கனவே கடந்த மே மாதம் மத்திய நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து சென்றுள்ளனர். அவர்கள் இந்த விரிசலால் அணைக்கு பாதிப்பு இல்லை என்று தெரிவித்துள்ளனர். எனவே, பொதுமக்கள் யாரும் பீதி அடையவேண்டாம். தற்போது அணைக்கு தொடர்ந்து நீர் வந்த வண்ணம் உள்ளது. இதனால் இரவு- பகலாக அணையின் நீர்மட்டத்தை கண்காணித்து வருகிறோம் என்றார்.