கல்புர்கி கொலையில் சனாதன் சன்ஸ்தாவுக்கு தொடர்பா? 4 வருடம் முன்பே எச்சரித்த மராட்டிய போலீஸ்
பெங்களூர்: எழுத்தாளர் எம்.எம்.கல்பர்கி கொலை வழக்கில் கோவாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் வலதுசாரி இந்து அமைப்பான சனாதன் சன்ஸ்தாவுக்கு தொடர்பிருக்கலாம் என்று கர்நாடக போலீசார் சந்தேகிக்கின்றனர். 4 வருடங்கள் முன்பே மகாராஷ்டிரா போலீசார் அந்த அமைப்பின் செயல்பாடுகளில் அதிருப்தி தெரிவித்து அதை தடை செய்யுமாறு அப்போதைய மத்திய அரசுக்கு 1000 பக்கம் அறிக்கை அனுப்பிய தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
எழுத்தாளர் கொலை
கர்நாடகாவின் தார்வாட் நகரை சேர்ந்த எழுத்தாளர் கல்புர்கி கடந்த சில வாரங்கள் முன்பு அவரது வீட்டில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில், கோவாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சனாதன் சன்ஸ்தா அமைப்புக்கு தொடர்பிருக்கலாம் என கர்நாடக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மராட்டிய போலீஸ்
4 வருடங்கள் முன்பே அந்த அமைப்பை தடை செய்ய மராட்டிய போலீசார், மத்திய அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர். சனாதன் சன்ஸ்தா குறித்து ஆயிரம் பக்க அறிக்கையை தயாரித்து மத்திய அரசிடம் கொடுத்துள்ளனர். ஆனால் அப்போதைய மத்திய அரசு அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஒரு குரூப்
மராட்டிய போலீசார் அளித்த அறிக்கையில், ஒட்டுமொத்த சனாதன் சன்ஸ்தா அமைப்பே தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதாக கூறவில்லை. ஆனால், அதற்குள் ருத்ர பாட்டீல் என்பவர் தலைமையில் ஒரு குழு தீவிரவாத எண்ணத்தோடு உருவாகியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது. இருப்பினும், சனாதன் சன்ஸ்தா அமைப்பை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்று மராட்டிய போலீசார் சிபாரிசு செய்திருந்தனர்.
மத்திய அரசு தூங்கியது
ஆனால், காங்கிரஸ் தலைமையிலான அப்போதைய மத்திய அரசு சனாதன் சன்ஸ்தா மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அதை தீவிரவாத இயக்கம் என அறிவிக்கவில்லை. இந்நிலையில், அந்த ஆயிரம் பக்க அறிக்கையை தங்களிடம் தருமாறு மராட்டிய போலீசாரிடம் கர்நாடக போலீசார் கோரிக்கைவிடுத்துள்ளனர். அந்த அறிக்கை தங்கள் விசாரணைக்கு உதவியாக இருக்கும் என கர்நாடக போலீசார் நம்புகின்றனர்.
சந்தேகம்
ஏற்கனவே, புனே, கோவா போன்ற இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் சனாதன் சன்ஸ்தா அமைப்புக்கு தொடர்பிருப்பதாக ஒரு சந்தேகம் உள்ளதால், இந்துத்துவாவுக்கு எதிரான கருத்துகொண்டவர்களை சனாதன் சன்ஸ்தா அமைப்பை சேர்ந்தவர்கள்தான் கொலை செய்திருக்க வேண்டும் என்று கர்நாடக போலீசார் நம்புகிறார்கள். இதுகுறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.