அரசு செலவில் சொந்த ஊருக்கு விமான பயணம்! மிசோராம் ஆளுநர் பெனிவால் பதவி அதிரடியாக பறிப்பு!!
டெல்லி: மிசோராம் மாநில ஆளுநராக பதவி வகித்த கமலா பெனிவால், அதிரடியாக பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். குஜராத் மாநில ஆளுநராக இருந்து சமீபத்தில்தான் அவர் மிசோராம் மாநிலத்துக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், அரசு பணத்தை விரையம் செய்ததற்காக அவர் திடீரென நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குஜராத் மாநிலத்தில் நரேந்திரமோடி முதல்வராக இருந்தபோது அம்மாநில ஆளுநராக பதவி வகித்தவர் கமலா பெனிவால். அப்போது லோக்ஆயுக்தா நியமனம் உள்ளிட்ட பல பிரச்சினைகளில் முதல்வரும், ஆளுநரும் மோதிக்கொண்டனர்.
இந்நிலையில் மோடி பிரதமரானதும், கமலா பெனிவால் மிசோராம் மாநிலத்துக்கு மாற்றப்பட்டார். அங்கு 30 நாட்களே கவர்னராக பணியாற்றிய நிலையில் திடீரென நேற்று மாலை அவரை ஆளுநர் பதவியிலிருந்து நீக்கி பிரணாப் முகர்ஜி உத்தரவிட்டுள்ளார். மணிப்பூர் ஆளுநர் துக்கல், மிசோராம் பொறுப்பையும் கூடுதலாக பார்ப்பார் என்று குடியரசு தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது.
குஜராத் மாநில ஆளுனராக கமலா பெனிவால் பதவி வகித்த காலத்தில், தனது விமான பயணத்தில் அவர் முறைகேடு செய்ததாக கடந்த வாரம் குற்றச்சாட்டு எழுந்தது.
2011ம் ஆண்டு முதல் குஜராத் ஆளுநராக பதவி வகித்த காலத்தில் அவர் 63 முறை விமானத்தில் சென்றுள்ளார். இதில் தனது சொந்த மாநிலமான ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் நகருக்கு 53 முறையும், டெல்லிக்கு 10 முறையும் அரசு செலவில் அவர் சென்றது தெரியவந்தது. இதற்காக அரசு பணத்தில் 1.5 கோடி ரூபாயை அவர் செலவு செய்துள்ளதாக கவர்னர் மாளிகையின் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. தனது சொந்த ஊருக்கு சென்றதை கூட அவர் அலுவலக பயணம் என்று குறிப்பிட்டதால் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதே நேரம், மத்திய அரசின் சிபாரிசில் குடியரசு தலைவர் எடுத்துள்ள இந்த நடவடிக்கை, அரசியல் பழிவாங்கும் செயல் என்று குஜராத் மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரான சங்கர்சிங் வகேலா (காங்கிரஸ் ) குற்றம்சாட்டினார்.