பலாத்காரத்துக்கு எதிராக பெங்களூர் பந்த்: கன்னட அமைப்புகள் அறிவிப்பு
பெங்களூர்: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெங்களூரில் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டி வரும் வியாழக்கிழமை ஒரு நாள் பந்த் நடத்த கன்னட அமைப்புகள் அழைப்புவிடுத்துள்ளன.
பெங்களூரில் பள்ளி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது, கல்லூரி மாணவி காரில் கடத்தி சென்று பலாத்காரம் செய்யப்பட்டது என சமீபகாலமாக பலாத்கார சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இதனை கண்டிக்கும் வகையில் வரும் வியாழக்கிழமை ஒரு நாள், 'பெங்களூர் பந்த்' நடத்த கன்னட அமைப்புகள் முடிவு செய்துள்ளன. இதுகுறித்து, கன்னட சலுவளி வாட்டாள் கட்சி தலைவர் நாகராஜ் கூறுகையில் "பெங்களூர் நகரை, பலாத்காரங்களின் நகரமாக மாற விடமாட்டோம். வியாழக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை பந்த் நடைபெறும்.
இந்த போராட்டத்துக்கு பெங்களூர் நகர மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அன்றையதினம், முதல்வர் வீட்டுக்கு ஊர்வலமாக சென்று பலாத்காரங்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு மனு அளிக்கப்படும். பந்த் தினத்தன்று அத்தியாவசிய சேவைகள் வழக்கம்போல செயல்படும்" என்றார்.
இதனிடையே, பந்த் காரணமாக, பெங்களூரிலுள்ள சில பள்ளிகள் விடுமுறை அறிவித்துள்ளன. பஸ், ஆட்டோக்கள், போலீஸ் பாதுகாப்புடன் வழக்கம்போல இயக்கப்படும் என்று தெரிகிறது.