இன்னும் மறையாத கார்கில் போர் வடு... ஒன்இந்தியாவின் நேரடி ரிப்போர்ட்!
- ரிச்சா பாஜ்பாய் (ஒன் இந்தியா செய்தியாளர்)
டிராஸ், ஜம்மு காஷ்மீர்: கார்கில் போர் முடிந்து 15 வருடங்களாகியும் போரினால் ஏற்பட்ட வடுக்கள் இன்னும் அங்குள்ள மக்களின் மனதிலிருந்து அகலவில்லை.
இந்தியா, பாகிஸ்தான் இடையே கார்கில் பகுதியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு போர் மூண்டபோது அங்கிருந்த பலரும் இன்னும் அந்த நினைவிலிருந்து மீளாமல் உள்ளனர்.
போர் நடந்தபோது ஜாகிருக்கு 15 வயது. எட்டாவது படித்துக் கொண்டிருந்த சிறுவன். அதேபோல இன்னொருவர் குலாம் காதிர்.
இன்டர்நெட் மையம் நடத்தி வரும் ஜாகிர்
ஜாகிருக்கு இப்போது 30 வயதாகிறது. டிராஸ் பகுதியில் இன்டர்நெட் மையத்தை நடத்தி வருகிறார். கார்கில் போர் மூண்டபோது நடந்தது குறித்து அவர் கூறுகையில், போர் தொடங்கிய அன்று எங்களது பள்ளிக்கு விடுமுறை விட்டனர். அப்போது நாங்கள் பள்ளியில் இருந்தோம். சாப்பிட்டு முடித்து விட்டிருந்தோம். திடீரென குண்டுச் சத்தம் கேட்டது.
கலவரம் வெடித்ததாக கூறிய ஆசிரியர்
எங்களுக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. எங்களது ஆசிரியர்தான், கலவரம் வெடித்து விட்டது போல. எல்லோரும் வீடுகளுக்குச் செல்லுங்கள் என்று உத்தரவிட்டார்.
இரவு முழுவதும் தாக்குதல்
அப்போது இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் மூண்டது குறித்து எங்களுக்குத் தெரியாது. இரவு முழுவதும் குண்டுச் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. மிகவும் கொடூரமான இரவு அது. எங்களை நமது ராணுவத்தினர் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர உதவினர் என்றார் அவர்.
பயந்து ஓடினேன்
குலாம் காதிர் கூறுகையில், நான் பயத்தில் வீட்டை விட்டு ஓடினேன். ஓடிக் கொண்டே இருந்தேன். அப்போது ஒரு ராணுவ வீரர் என்னை தடுத்து நிறுத்தினார். இப்படி ஓடக் கூடாது. ஓடினால் சுட்டு விடுவார்கள் என்றார். பிறகு நான் வீடு திரும்பினேன்.
அதிர்ச்சி அடைந்த தாயார்
எனது கோலத்தைப் பார்த்து எனது தாயார் அதிர்ச்சி அடைந்தார். அப்போது நடந்ததை இப்போது நினைத்தாலும் எனக்குத் தூக்கம் வருவதில்லை என்றார் காதிர். இப்போது இவரது ஒரே கனவு ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்பதுதானாம்.
வேண்டாம் இனி...
இப்போது இப்பகுதியில் உள்ள இளைஞர்களிடம் கார்கில் போர் குறித்துக் கேட்டால், இப்படி ஒரு போர் இனி ஒருமுறை எங்களுக்கு வேண்டாம். நாங்கள் அமைதியை விரும்புகிறோம் என்று உரத்த குரலில் கூறுகின்றனர்.