6 வயது சிறுமி பலாத்கார வழக்கை சிபிஐக்கு மாற்றத் தேவையில்லை: கர்நாடக முதல்வர் சித்தராமையா
பெங்களூர்: 6 வயது பள்ளி சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை தேவையில்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த 6 வயது சிறுமி 2 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் பள்ளியின் ஸ்கேட்டிங் பயிற்சியாளர் உள்பட 3 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுமாறு கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அனைத்தையும் சிபிஐ விசாரணைக்கு அனுப்பிவிட முடியாது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்யும் அளவுக்கு நம் போலீசார் திறம் படைத்தவர்களாக உள்ளனர் என்றார்.
இந்த சம்பவம் பற்றி கர்நாடக உயர் போலீஸ் அதிகாரியான எம்.என். ரெட்டி கூறுகையில்,
இந்த வழக்கு தொடர்பாக போலீசார் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். குற்றவாளிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் அந்த சிறுமி படித்த பள்ளியில் வேலை பார்த்தவர்கள் என்றார்.