இந்துமதவெறி அமைப்பான ஸ்ரீராம் சேனாவுக்கு கர்நாடகாவிலும் தடை விதிக்கப்படுகிறது!
பெங்களூர்: கோவாவைத் தொடர்ந்து இந்துமதவெறி அமைப்பான ஸ்ரீராம் சேனாவுக்கு கர்நாடகாவிலும் தடை விதிக்கப்பட இருக்கிறது.
2009ஆம் ஆண்டு மங்களூரில் பப்புகளில் புகுந்து கலாசாரத்தை சீரழிக்கிறார்கள் என்று பெண்களை தாக்கியது முத்தலிக் கும்பல். லோக்சபா தேர்தலின் போது முத்தலிக்கை பாஜக சேர்த்துக் கொண்டது.
ஆனால் பாஜகவிலேயே கடுமையாக எதிர்ப்பு கிளம்பியதால் சில மணிநேரங்களிலேயே அவரை நீக்கியதாகவும் அறிவித்தது. இந்த நிலையில் கோவா மாநிலத்தில் பப்புகளுக்கு எதிராக போராடப் போவதாக ஸ்ரீராம் சேனா அறிவித்தது.
இதனால் கடந்த மாதம் 20-ந் தேதி ஸ்ரீராம் சேனாவை தடை செய்த அமைப்பாக கோவா மாநில அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து தற்போது கர்நாடகாவிலும் இந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட இருக்கிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த கர்நாடகா உள்துறை அமைச்சர் கே.ஜே. ஜார்ஜ், கோவாவில் மனோகர் பாரிக்கர் அரசு செய்ததைப் போல ஸ்ரீராம் சேனாவை நாங்களும் தடை செய்வோம். அந்த அமைப்பின் செயல்பாடுகள் அச்சுறுத்தலாக இருப்பதாக காவல்துறை அறிக்கை அளித்துள்ளது என்றார்.