காஷ்மீர் வெள்ளம்: மேலும் 60,000 பேர் மீட்பு- தொற்று நோய் பரவும் அபாயம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தினர் மேலும் 60,000 பேரை வெள்ளத்திலிருந்து மீட்டுள்ளனர். ஆனால் இன்னமும் 1 லட்சம் பேர் வெள்ளத்தினால் சூழ்ந்த பகுதிகளில் தவிப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீண்டும் மழை பெய்த காரணத்தால் ஞாயிற்றுக் கிழமை மீட்புப்பணிகள் சற்றே பின்னடைவு கண்டது.
காஷ்மீரில் தொற்று நோய் பரவும் அபாயத்தை தடுக்க 300 மருத்துவப் பணியாளர்களை அனுப்பி வைக்க, மத்திய அரசுக்கு அம்மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளையும், மருத்துவப் பணியாளர்களையும், அம்மாநில சுகாதாரத்துறை அனுப்பி வைத்துள்ளது.
நோய் தொற்று அபாயம்
மழை வெள்ளத்தில் சிக்கி ஏராளமான கால்நடைகள் உயிரிழந்ததாலும், அவற்றின் சடலங்கள் பள்ளத்தாக்குப் பகுதிகளில் ஒதுக்கியதாலும் தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது.
மருத்துவர்கள் பற்றாக்குறை
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜம்மு காஷ்மீர் சுகாதாரத்துறை இயக்குனர் சலீம் ரஹ்மான், வெள்ளத்தால் பாதிக்கப்படாத பகுதிகளில் உள்ள மருத்துவர்களை, வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். மத்திய அரசால் அனுப்பி வைக்கப்பட்ட 30 மருத்துவர்களும், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மீண்டும் மழை
இதனிடையே காஷ்மீரில் ஞாயிறு காலை 8.30 மணியளவில் மழை கொட்டத் தொடங்கியது ஆனால் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு நின்றது. வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால் இந்திய விமானப்படையின் நிவாரண விமானங்கள் நிறுத்தப்பட்டன. ஆனால் அவசரகால மருந்துகள் வெள்ளப்பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன.
ஆயிரக்கணக்கானோர் தவிப்பு
பிறகு காலை 11.15 மணியளவில் சகஜமான நிவாரண உதவிப்பணிகள் தொடங்கப்பட்டதாக ஐ.ஏ.எஃப் அதிகாரிகள் தெரிவித்தனர். இன்னும் ஆயிரக்கணக்கானோர் சாலைகளில் பாதுகாப்பான கூரை கூட இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.
உணவு, தண்ணீர்
மக்களுக்கு குடிநீர் பாட்டில்களும், உணவுப்பொட்டலங்களும் பெருமளவு அளிக்கப்பட்டு வருவதாக ராணுவத்தினர் தெரிவித்தனர்.
சுமார் 4 லட்சம் லிட்டர்கள் தண்ணீர், 131,500 உணவுப் பொட்டலங்கள், மற்றும் 800 டன்கள் சமைத்த உணவு ஆகியவை வினியோகிக்கப்பட்டுள்ளது.
ராணுவ முகாம்கள்
ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் ராணுவத்தினர் 19 நிவாரண முகாம்களை அமைத்துள்ளனர். ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் ராம்சு என்ற இடம் வரை ராணுவத்தினரால் இதுவரை சீர் செய்யப்பட்டுள்ளது.
கடைகள் மூடல்
வெள்ளத்தால் பேரழிவை சந்தித்துள்ள ஜம்மு காஷ்மீரில் அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. ஸ்ரீநகரில் உள்ள முக்கிய சந்தைப் பகுதியில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.