கேஜ்ரிவால் மீது மீண்டும் தாக்குதல்! வாரணாசியில் சரமாரி கல்லடி!!
வாரணாசி: ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வாரணாசியில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அரவிந்த் கேஜ்ரிவால் மீது சரமாரியாக கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அரவிந்த் கேஜ்ரிவால் எங்கு போனாலும் அவர் அடிவாங்காமல் வருவதில்லை.. கருப்பு மை தெளிப்பது, முட்டை வீசுவது, கன்னத்தில் அடிப்பது, வயிற்றில் குத்துவிடுவது என எல்லா ரக அடிகளையும் வாங்கிக் கட்டிக் கொள்கிறார்.
தற்போது வாரணாசியில் முகாமிட்டிருக்கும் கேஜ்ரிவால் நேற்று பனாரஸ் ஹிந்து பல்கலைக் கழகம் அருகே பிரசாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது ஒரு இளைஞர்கள் கூட்டம் திடீரென கேஜ்ரிவால் மீது சரமாரியாக கற்களை வீசத் தொடங்கியது. இதில் கேஜ்ரிவால் காயமடைந்தார்.
இதைத் தொடர்ந்து அந்த இளைஞர்களை போலீசார் பிடித்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் ஆதரவாளர்கள் என தெரியவந்ததாக கூறப்படுகிறது.