வாரணாசியில் கேஜ்ரிவால் குடும்பத்துடன் தங்கியிருந்த கோயில் வளாகத்தில் இருந்து வெளியேற்றம்!!
வாரணாசி: உத்தரபிரதேச மாநிலம்வாரணாசியில் உள்ள ஒரு கோயிலில் தங்கி இருந்து தேர்தல் வேலை செய்த ஆம்ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை வெளியேறுமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் வாரணாசி தொகுதியில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை எதிர்த்து அரவிந்த் கேஜ்ரிவால் போட்டியிடுகிறார். இதற்காக கடந்த 15 ம் தேதி முதல் கெஜ்ரிவால் வாரணாசியில் பிரசாரம் செய்து வருகிறார். தேர்தல் முடியும் வரை சங்கர்மோச்சான் கோயில் வளாகத்தில் உள்ள ஒரு அறையில் தங்கி இருந்தார். இவருடன் தாயார் கீதாதேவி, மற்றும் மனைவி ஆகியோர் உடன் இருந்தனர்.
கேஜ்ரிவால் வெளியேற்றம்
இவரை பார்க்க, அரசியல் குறித்து ஆலோசிக்க பலரும் வந்து சென்றனர். இதனால் பக்தர்கள் முகம் சுழித்தனர். கோயில் தரிசனத்திற்கு இடையூறாக உள்ளது. அதனால் கேஜ்ரிவால் மாற்று இடத்திற்கு செல்ல வேண்டும் என பக்தர்கள் கோயில் நிர்வாகத்திடம் முறையிட்டனர்.
இதனையடுத்து கெஜ்ரிவால் தனது குடும்பத்தினருடன் வெளியேற வேண்டும் என கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. கேஜ்ரிவால், நாளை ராகுல் போட்டியிடும் தொகுதியான அமேதிக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.
போஸ்டர் யுத்தம்
அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக வாரணாசியில் போஸ்டர் யுத்தம் நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர்அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்ற 49 நாட்களில் டெல்லி முதல்வர் பதவியில் இருந்து விலகியதை கேலி செய்யும் விதத்தில், நகரின் அனைத்து பகுதிகளிலும் கெஜ்ரிவாலை 'தப்பி ஓடியவர்' என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதனை ஆம் ஆத்மி தொண்டர்கள் அகற்றினர்.
நல்ல மன நிம்மதி கொடு
தற்போது சில இடங்களில் கேஜ்ரிவாலுக்கு நல்ல புத்தி, தெளிவான சிந்தனை கொடு என்று இறைவனை பிரார்த்திப்பதாக போஸ்டர் ஒட்டி மறைமுக விமர்சனம் செய்துள்ளனர்.
கேஜ்ரிவாலுக்கு எதிர்ப்பு
வாரணாசியில் பல இடங்களில் கேஜ்ரிவால் பிரசாரத்திற்கு செல்லும் போது பாஜகவினர் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். கறுப்பு மை வீச்சு, கல்வீச்சு, முட்டை வீச்சு என பல எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார். தற்போது அவருக்கு எதிராக போஸ்டர் யுத்தமும் தொடங்கியுள்ளனர் பாஜகவினர்.