ஆச்சரியம் ஆனால் உண்மை.. கேரளாவில் முழு மதுவிலக்கு வரப் போகிறது!
திருவனந்தபுரம்: இந்தியாவிலேயே அதிக குடிகாரர்களைக் கொண்ட மாநிலம் என்ற பெயரைப் பெற்றுள்ள கேரளாவின் முகம் அப்படியே மாறப் போகிறது .. அங்கு முழுமையான மது விலக்கை அமல்படுத்த உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது.
இந்த செய்தியை நம்புவது ரொம்பக் கடினம்தான். ஆனால் சீக்கிரமே இதை செய்யப் போவதாக கூறுகிறார்கள் காங்கிரஸார். நாட்டிலேயே அதிக அளவிலான மது அடிமைகள் கேரளாவில்தான் உள்ளனர் என்பது புள்ளிவிவரத் தகவல். கேரளாவில்தான் அதிக அளவில் மது அருந்துகிறார்கள்.
இங்கு வெளிநாட்டு மது, சாராயம், கள் என அனைத்து வகையான மது வகைகளும் தாராளமாக கிடைக்கும். கடைகளுக்கு அரசே பெர்மிட் கொடுத்துள்ளது. இங்கு குடிக்காத ஆண்களைப் பார்ப்பது மிக மிக அரிதாகும். இப்படிப்பட்ட கேரளாவில் பூரண மது விலக்கு என்றால் ஆச்சரியமாகத்தானே இருக்கும்.
அடுத்த ஆண்டு முதல் பூரண மதுவிலக்கு
பூரண மது விலக்கு குறித்த முடிவை முதல்வர் உம்மன் சாண்டி அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார். இதை கொள்கை முடிவாக அரசு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே இதை எதிர்த்து யாரும் வழக்குக் கூட தொடர முடியாது.
படிப்படியாக
இந்தப் பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தப் போகிறது கேரள அரசு. முதல் கட்டமாக 2, 3 மற்றும் 4 ஸ்டார் ஹோட்டல்களுக்கு வழங்கப்பட்டுள்ள பார் உரிமம் ரத்து செய்யப்படும். இதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 730 பார்கள் மூடப்படும். அதேசமயம், 5 நட்சத்திர ஹோட்டல்களுக்கு மட்டும் தொடர்ந்து பார்கள் செயல்பட அனுமதி தரப்படும்.
உரிமம் நீட்டிப்பு கிடையாது
இந்த 5 ஸ்டார் ஹோட்டல்களுக்கான பார்களின் உரிமம் அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை உள்ளது. அதன் பின்னர் நீட்டிப்புத் தரப்பட மாட்டாது. கேரளாவில் தற்போது 23, ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளன.
பீர் பார்லர்களின் கதி...
இவை போக கேரளாவில் தற்போது 111 பீர் மற்றும் ஒயின் மட்டும் விற்பனை செய்யப்படும் பார்லர்கள் உள்ளன. அவை உடனடியாட மூடப்படாது என்று தெரிகிறது.
10 வருடத்தில் சுத்தமாகி விடும் கேரளா
அடுத்த 10 வருடங்களுக்குள் மது வாடையே இல்லாத மாநிலமாக கேரளா மாற்றப்படும் என்றும் சாண்டி தெரிவித்துள்ளார். மது கொடுமையை விளக்கும் வகையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளையும், தீவிரப் பிரசாரத்தையும் அரசே மேற்கொள்ளப் போகிறதாம்.
பெவ்கோ காலி...
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் உள்ளது போல கேரளாவில் பீவரேஜஸ் கார்ப்பரேஷனின் அதாவது பெவ்கோ கடைகள் உள்ளன. இங்கு உள்நாட்டில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது வகைகள் விற்கப்படுகின்றன. இவை படிப்படியாக மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 334 கடைகள் இவற்றுக்கு உள்ளன. முதல் கட்டமாக இவற்றில் இனி ஞாயிற்றுக்கிழமை விற்பனை இருக்காது. தற்போது மாதத்தின் முதல் தேதியில் மட்டுமே இக்கடைகள் மூடப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
லிட்டர் லிட்டராக குடிக்கும் கேரளத்தினர்
இந்தியாவிலேயே தனி நபர் மது அருந்தும் விகிதாச்சாரம் கேரளாவில்தான் அதிகம். அதாவது இங்கு ஒரு நபர் சராசரியாக 8.3 லிட்டர் மது அருந்துகிறார். பஞ்சாப் 2வது இடத்தில் உள்ளது. இங்கு 7.9 லிட்டராக விகிதாச்சாரம் உள்ளது. தேசிய சராசரியானது 4 லிட்டராகும்.
ரூ. 8000 கோடி வருமானம் பாதிக்கும்
தற்போது மது விற்பனை மூலம் கேரள அரசுக்கு ரூ. 8000 கோடி வருவாய் கிடைக்கும். மது விலக்கால் இது நின்று போகும். இருந்தாலும் மது விலக்கை அமல்படுத்த உம்மன் சாண்டி உறுதியாக உள்ளாராம்.
கத்தோலிக்கர்கள், முஸ்லீம்கள் கோரிக்கை வெற்றி
மாநிலத்தில் முழு மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பல்வறு கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்புகளும், இஸ்லாமிய அமைப்புகளும் நீண்ட காலமாக கோரி வருகின்றன. தற்போதுதான் அவற்றுக்கு வெற்றி கிடைத்துள்ளது.
என்று தணியும் எங்கள் தமிழகத்தின் மோகம்...?
குடியிலேயே மூழ்கிக் கிடக்கும் கேரளா விழித்துக் கொள்ளப் போகிறது. தமிழகமும் சுதாரிக்குமா...!