பாக். தீவிரவாத இயக்க தலைவன் உ.பி.யில் கைது: இந்து இயக்கத்தலைவரைக் கொல்ல சதித்திட்டம்!
லக்னௌ: பாகிஸ்தான் நாட்டின் முக்கிய தீவிரவாத இயக்க தலைவனும், அந்நாட்டு உளவுப்பிரிவான ஐ.எஸ்.ஐ.யின் கூட்டாளியுமான ரத்தன் தீப் சிங் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டான். இந்து இயக்கத் தலைவர் ஒருவரை அவன் கொல்ல சதித்திட்டம் தீட்டியது முறியடிக்கப்பட்டது.
இந்தியாவிற்கு எதிரான காலிஸ்தான் கமாண்டோ படையின் முக்கிய தலைவனாக செயல்பட்ட ரத்தன் தீப் சிங், பின்னர் பப்பர் கல்சா இண்டர்நேஷனல் என்ற இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டான்.
சிறிது காலத்திற்கு பின் அதன் தலைவனாகவும் அவன் பொறுப்பேற்றான். கடந்த ஜூலை 2014 ஆம் ஆண்டு ஐ.எஸ்.ஐ இயக்கம் மீண்டும் காலிஸ்தான் பிந்தரன்வாலே புலிப்படை இயக்கத்திற்கு புத்துயிரூட்டியது. அவ்வியக்கத்தின் தலைவனாக சிங்கை ஐ,எஸ்.ஐ. தேர்வு செய்தது.
உத்தரபிரதேச மாநிலத்தில் ரத்தன் தீப் சிங் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பஞ்சாபிலிருந்து 19 பேர் கொண்ட போலீசார் குழு உடனடியாக உத்தரப்பிரதேசத்திலுள்ள கோரக்பூருக்கு விரைந்தது. அங்கு சிங்கை சுற்றிவளைத்த போலீசார் அவனிடமிருந்து பாகிஸ்தான் பாஸ்போர்ட், ஐ.டி. கார்டு மற்றும் அந்நாட்டு கரன்சியை கைப்பற்றியதுடன் அவனையும் கைது செய்தனர் இதனை பஞ்சாப் மாநில காவல்துறை ஐ.ஜி மன்மோகன் சிங் உறுதிபடுத்தியுள்ளார்.
அவனிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் இந்து இயக்கத்தின் முக்கிய தலைவரை கொல்ல அவன் திட்டமிட்டது தெரியவந்தது.