கணவர்களைக் காக்க கிட்னி தானம் – ஒருவர் தாலியை மற்றொருவர் காப்பாற்றிய மகத்துவம்!
மும்பை: மும்பையில் சிறுநீரகம் பழுதடைந்த தங்களுடைய கணவர்களுக்காக சிறுநீரகங்களை மனமுவந்து தானம் செய்து தங்கள் கணவர்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர் இரண்டு பெண்கள்.
மும்பையை சேர்ந்தவர் ஹரீஷ் பண்டாரி. 43 வயதான இவருக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு சிறுநீரகம் பழுதடைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் டயாலிசிஸ் செய்யப்பட்டு மரண வேதனையுடன் வாழ்ந்து கொண்டிருந்தார்.
மாற்று அறுவை சிகிச்சை:
நீண்ட நாள் உயிர்வாழ சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தான் ஒரே வழி என்று டாக்டர்கள் அறிவுரை வழங்கினார்கள்.
மனைவியின் தியாகம்:
பொருத்தமான சிறுநீரகம் தானமாக கிடைக்காத நிலையில் கணவரின் உயிரை காப்பாற்ற தனது சிறுநீரகத்தை வழங்க முன் வந்தார் அவரது மனைவி ராக்கி.
ரத்த வகை வேறு:
டாக்டர்கள் ராக்கிக்கு பரிசோதனை மேற்கொண்டனர். ஆனால் ரத்தப்பிரிவு இருவருக்கும் வெவ்வேறாக இருந்ததால் பொருத்த முடியாது என்று டாக்டர்கள் தெரிவித்து விட்டனர்.
தவித்த ராக்கி:
ஹரீஸ் பண்டாரிக்கு "பி நெகட்டிவ்". அவரது மனைவி ராக்கிக்கு "ஏ பாசிட்டிவ்". இதனால் கணவரை காப்பாற்ற முடியாமல் ராக்கி தவித்தார். இதே ரத்த பிரிவு கொண்ட யாராவது சிறுநீரகம் தானம் செய்தால் பிரச்சினை இல்லை என்றார்கள் டாக்டர்கள்.
ஓடிய நாட்கள்:
ஒருவரிடம் எதை வேண்டுமானாலும் கேட்கலாம். உனது ஒரு உறுப்பை தா என்று கேட்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் பண்டாரி குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்தனர்.
தேடிய மற்றொருவர்:
மும்பை மருத்துவமனை நிர்வாகம் சிறுநீரகம் தேவைப்படும் விபரத்தை பதிவு செய்து காத்திருந்தது. அப்போது குஜராத் மாநிலம் பரோபாவை சேர்ந்த ஷா என்பவரும் சிறுநீரகம் பாதிப்படைந்து மாற்று சிறுநீரகத்தை தேடி கொண்டிருப்பது பற்றி மும்பை ஆஸ்பத்திரிக்கு தகவல் கொடுத்தார்.
அங்கும் போராட்டம்:
ஷாவின் மனைவி தீபிகாவுக்கு ரத்தப்பிரிவு "பி நெகடிவ்". அவரது கணவருக்கு "ஏ பாசிடிவ்". இதனால் அவரும் கணவரை காப்பாற்ற முடியாமல் போராடி கொண்டிருந்தார்.
ஒத்துப் போன சிறுநீரகம்:
தீபிகாவின் சிறுநீரகம் ராக்கியின் கணவருக்கும், ராக்கியின் சிறுநீரகம் தீபிகாவின் கணவருக்கும் ஒத்து போனது.
முழுமனதுடன் பரிமாற்றம்:
இதை அறிந்ததும் இரண்டு பெண்களும் மகிழ்ச்சி அடைந்தனர். தங்கள் கணவர்களின் உயிரை காப்பாற்ற சிறு நீரகங்களை பரிமாறி கொள்ள இரண்டு பெண்களும் முழு மனதுடன் சம்மதித்தனர்.
இடம் மாறிய சிறுநீரகங்கள்:
இதையடுத்து மருத்துவ பரிசோதனைகள் நடந்தன. எல்லாம் சரியானதும் ராக்கியின் சிறுநீரகம் தீபிகாவின் கணவருக்கும், தீபிகாவின் சிறுநீரகம் ராக்கியின் கணவருக்கும் பொருத்தப்பட்டது.
இதுதான் வாழ்க்கை:
கொடுத்து வாழ் என்ற தாத்பரியத்தின்படி ஒருவர் கணவரின் உயிரை மற்றொருவர் காப்பாறி மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர் இரு தம்பதிகளும்.