ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்காத மல்லையா.. ஐபிஎல்லுக்காக பணத்தைக் இறைக்கும் கொடுமை
பெங்களூர்: தனது கிங்பிஷர் விமான நிறுவன ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கக் கூட இயலாத யுபி குழும தலைவர் விஜய் மல்லையா, ஐபிஎல் போட்டியில் வீரர்களை ஏலம் எடுப்பதில் பணத்தை வாரியிறைத்து வருவது பலரையும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. குறிப்பாக கிங்பிஷர் நிறுவன ஊழியர்கள் கடும் எரிச்சலடைந்துள்ளனராம்.
பெங்களூரில் நேற்று தொடங்கிய ஐபிஎல் வீரர்கள் ஏலத்தின் முதல் நாளிலேயே ரூ. 28.70 கோடியை செலவிட்டுள்ளார் மல்லையா.
இவரது கிங்பிஷர் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சம்பளப் பாக்கியை வைத்துள்ளார் மல்லையா. இந்த நிறுவனத்தின் மூன்றாவது காலாண்டு நஷ்டக் கணக்கோ.. ரூ. 822 கோடியாகும். இப்படி திரும்பிய பக்கமெல்லாம் நஷ்டமும், கஷ்டமுமாக இருந்து வரும் நிலையில் ஐபிஎல்லுக்காக இஷ்டத்திற்கு செலவிட்டு வரும் மல்லையாவின் செயல் பலரையும் கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.
7 வங்கிகளில் கடன்
கிங்பிஷர் நிறுவனத்தை தூக்கி நிறுத்துவதற்காக ரூ. 7000 கோடி அளவுக்கு கடன் வாங்கியுள்ளார் மல்லையா. ஆனால் அதை இதுவரை அவர் திருப்பித் தரவில்லை.
சம்பளத்திற்காக ஏங்கித் தவிக்கும் ஊழியர்கள்
வாங்கிய கடனைக் கொடுக்காமல் மல்லையா இருக்க.. அவரிடமிருந்து தங்களது பாக்கி சம்பளம் வராதா என்ற ஏக்கத்தில் கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலே காத்திருக்கிறார்கள் கிங்பிஷர் ஊழியர்கள்.
ஊழியரின் மனைவி தற்கொலை
சம்பளப் பாக்கி மற்றும் மன அழுத்தம், குடும்பத்தை நடத்த முடியாத நிலை என்று பல காரணங்களால் ஒரு கிங்பிஷர் நிறுவன ஊழியரின் மனைவி தற்கொலை செய்த அவலமும் நடந்தது.
அப்பாவும், மகனும் போடும் ஆட்டம்
ஆனால் இது பற்றியெல்லாம் கிஞ்சித்தும் கவலைப்படாமல், அப்பா மல்லையாவும், மகன் சித்தார்த் மல்லையாவும் ஆடும் ஆட்டம் சொல்லி மாளாது.
காலண்டர் என்ற பெயரில் அசிங்கம்
வருடா வருடம் கிங்பிஷர் காலண்டரை வெளியிடுவது யுபி குழுமத்தின் வழக்கம். இந்த காலண்டருக்காக மாதக் கணக்கில் அழகிகளைத் தேர்வு செய்து அவர்களை அரை குறை ஆடையுடன் ஏதாவது ஒரு நாட்டில் வைத்து போட்டோ ஷூட் செய்து அந்த காலண்டரை வெளியிடுவார்கள். இந்த காலண்டர்களையெல்லாம் வீட்டில் மாட்டி வைக்க முடியாது.. அவ்வளவு மோசமான படங்களுடன் கூடிய காலண்டர்கள் இவை.
இந்த லட்சணத்தில்
நிலைமை இப்படியிருக்க யுவராஜ் சிங்குக்காக மல்லையா குரூப் 14 கோடியை வம்படியாக செலவு செய்திருக்கும் செயலை பலரையும் ஆத்திரமூட்டியுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் யுவராஜை வெ்ன்று விடக் கூடாது என்பதற்காக, வேண்டும் என்றே அதிக தொகைக்கு யுவராஜை மல்லையா வாங்கியுள்ளார் என்று கூறுகிறார்கள்.
இந்த ஏலத்திற்காக மட்டும் 58.2 கோடி
7வது ஐபிஎல் ஏலத்திற்காக மட்டும் கிட்டத்தட்ட ரூ. 58.2 கோடியை இதுவரை செலவிட்டுள்ளதாம் மல்லையாவின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்.
கிங்பிஷர் ஊழியர்களுக்கு பாக்கித் தொகை ரூ. 350 கோடி
கிங்பிஷர் ஊழியர்களுக்கு சம்பளம் உள்ளிட்டவையாக மட்டும் ரூ. 350 கோடியை யுபி குழுமம் கொடுக்க வேண்டியுள்ளது.
பிடித்த வருமான வரியை கூட கொடுக்காத கொடுமை
தங்களது ஊழியர்களின் சம்பளத்திலிருந்து வருமான வரிக்காக பிடித்தம் செய்யப்பட்ட தொகையையும் கூட வருமான வரித்துறைக்கு செலுத்தாமல் உள்ளதாம் கிங்பிஷர்.
ஊரெல்லாம் கடன்
தனது மகன் சித்தார்த்தின் 18வது பிறந்த நாளையொட்டி கிங்பிஷர் விமான நிறுவனத்தைத் தொடங்கினார் மல்லையா. 2005ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் வங்கிகள், எண்ணெய் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் 7000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கிக் குவித்துள்ளார்.
ரேஸ்.. குதிரை
மல்லையாவிடம் கிங்பிஷர் மது பான தயாரிப்பு நிறுவனம் தவிர பார்முலா ஒன் பந்தய அணி, ரேஸ் குதிரைகள், சொகுசுப் படகுகள்,உலகெங்கும் பல இடங்களில் சொத்துக்கள் என சொத்துக்கள் குவிந்து கிடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.