சீனாவுடனான பேச்சு வார்த்தையில் 'உள்துறை இணை அமைச்சர்' ரிஜிஜூ இல்லையே.. புதிய சர்ச்சை
டெல்லி: எல்லையில் சீன ராணுவம் அத்துமீறிய நிலையிலும், மத்திய உள்துறை மற்றும் உள்துறை இணை அமைச்சர்கள் சீன அதிபரை சந்திக்காமல் ஆப்சென்ட் ஆனது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் அருணாசலப்பிரதேசத்தைச் சேர்ந்த உள்துறை இணை அமைச்சர் ரிஜிஜு பேச்சுவார்த்தையில் பங்கேற்க அனுமதிக்கப்படாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து தாயகம் திரும்பியுள்ளார். அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று முன்தினம் தனது மாளிகையில் விருந்து அளித்து உபசரித்தார். அப்போது, இரு நாடுகளின் முக்கியஸ்தர்கள் இடையிலான பேச்சுவார்த்தைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அளித்த பட்டியலின்படி பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் முக்கியஸ்தர்கள் பெயர்களை குடியரசுத் தலைவர் மாளிகை இறுதி செய்தது. இதில் வேடிக்கை என்னவென்றால், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவர் சார்க் நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் மட்டத்திலான மாநாட்டில் பங்கேற்க நேபாளம் சென்றுவிட்டார். எனவே அவருக்கு பதிலாக மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரன் ரிஜிஜு பங்கேற்றிருக்க வேண்டும். ஆனால் அவரும் அன்த குழுவில் இடம் பெறவில்லை.
இத்தனைக்கும், சீனா பிரச்சினை செய்துவரும் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்தவர் இந்த கிரன் ரிஜிஜு. எனவே அவருக்கு வாக்களித்த மக்கள் சீன அதிபருடனான தங்களது எம்.பி.யின் பேச்சு வார்த்தை பலனளிக்க கூடும் என்ற எதிர்பார்ப்பில் இருந்திருப்பார்கள். அப்படியிருந்தும் பேச்சு வார்த்தை குழுவில் ரிஜிஜு இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனந்த் ஷர்மா கூறுகையில், இணை அமைச்சர்கள் இதுபோன்ற உயர் கூட்டத்தில் பங்கேற்பது முன்பு வழக்கத்தில் இல்லாமல் இருந்தது. ஆனால் சமீபகாலமாக அந்த வழக்கம் கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாக கேபினெட் அமைச்சரான ராஜ்நாத்சிங் இந்தியாவில் இல்லாத நிலையில் கண்டிப்பாக ரிஜிஜுவை அழைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.