கொல்கத்தா- புவனேஸ்வர்- விசாகப்பட்டினம்- சென்னை தொழில்மேம்பாட்டு வழித்தடம் வருகிறது!
புவனேஸ்வர்: கொல்கத்தா- புவனேஸ்வர்- விசாகப்பட்டினம்- சென்னை இடையே தொழிற்சாலைகள் மேம்பாட்டுத் வழித்தடத்தை உருவாக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
தென் மாநிலங்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்த சென்னை-பெங்களூர் இடையே தொழிற்சாலைகள் மேம்பாட்டு வழித்தடத்தை அமைப்பதற்கான திட்டம் ஏற்கெனவே வகுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.12 ஆயிரம் கோடி செலவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கிழக்கு கடற்கரை சாலை மாநிலங்களை ஒருங்கிணைத்து அதாவது கொல்கத்தா- புவனேஸர்- விசாகப்பட்டினம்- சென்னை இடையே தொழிற்சாலைகள் மேம்பாட்டு வழித்தடம் ஒன்றை உருவாக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
ஒடிஷா தலைநகர் புவனேஸ்வரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், பரிசீலிக்கப்பட்டு வரும் புதிய தொழிற்சாலை மேம்பாட்டு வழித்தடத்தின் தலைநகராக புவனேஸ்வர் திகழும். ஏனெனில் ஒடிஷாவில்தான் இதர மாநிலங்களை ஒப்பிடுகையில் ஏராளமான கனிம வளங்கள் இருக்கின்றன என்றார்.
அப்போது உடனிருந்த மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய அரசு கனிம வள ராயல்டி தொடர்பான கொள்கையை சீரமைக்க இருக்கிறது. இதில் அதிக பயனடையப் போவது ஒடிஷா மாநிலமாகத்தான் இருக்கும் என்றார்.