சசிகலா பழைய சொத்துக்கள் விற்பனை விவரம்: ஜெயலலிதா வழக்கறிஞர் வாதம்
பெங்களூர்: சசிகலாவுக்கு சொந்தமான பழைய சொத்துகளை ரிவர்வே அக்ரோ பார்ம் நிறுவனத்திற்கு ரூ.52 லட்சத்திற்கும் மெடோ அக்ரோ பார்ம் நிறுவனத்திற்கு ரூ.32 லட்சத்து 90 ஆயிரத்திற்கும் விற்பனை செய்துள்ளதாக ஜெயலலிதா தரப்பு வக்கீல் பி.குமார் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான்மைக்கல் டி.குன்ஹா முன் நேற்று விசாரணைக்கு வந்தபோது குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராகாமல் இருக்க விலக்கு அளிக்கக் கோரி அன்புக்கரசு, தனஞ்செயன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, ஜெயலலிதா தரப்பு வக்கீல் பி.குமார் 23வது நாளாக தனது வாதத்தைத் தொடர்ந்தார்.
அப்போது வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள ராமராஜ் அக்ரோ மில்ஸ் மற்றும் ரிவர்வே அக்ரோ பார்ம் ஆகிய கம்பெனிகளுக்கு எந்தெந்த வழியில் வருவாய் கிடைத்தது என்ற தகவலை பட்டியலிட்டார். அவர் கூறியதாவது: ராம்ராஜ் அக்ரோ மில் நிறுவனம் 1986ம் ஆண்டு, சென்னையை சேர்ந்த ஒரு குடும்பத்தால் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் பங்குதாரர் மற்றும் இயக்குனர்களாக வி.என்.சுதாகரன், இளவரசி, சுந்தரவடிவேல் ஆகியோர் சேர்ந்த பின், கம்பெனியின் வளர்ச்சிக்காக பங்கு விற்பனை தொடங்கினர். ஒரு பங்கு ரூ.3 என்ற வகையில் விற்பனை செய்யப்பட்டது. அதில் 6 லட்சத்து 16 ஆயிரம் பேர் பங்குதாரராக சேர்ந்தனர்.
அதன் மூலம் ரூ.18 லட்சத்து 48 ஆயிரம் வருவாய் கிடைத்தது. நிறுவனத்துக்கு சொந்தமான கட்டிடம் ரூ.40 லட்சத்து 20 ஆயிரம் செலவில் கட்டப்பட்டது. மேலும், நிறுவன வளர்ச்சிக்காக சிப்காட் நிறுவனத்திடம் ரூ.52 லட்சத்து 82 ஆயிரத்து 966 மற்றும் சென்னை அபிராமபுரம் கனரா வங்கியில் ரூ.1.64 லட்சம் கடன் பெற்றுள்ளதாக தெரிவித்தார். ரிவர்வே அக்ரோ பார்ம் கம்பெனிக்காக வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சொந்தமான பழைய சொத்துக்களை விற்பனை செய்துள்ளார்.
அதில், மெடோ அக்ரோ பார்ம் நிறுவனத்திற்கு ரூ.32 லட்சத்து 90 ஆயிரத்திற்கும், ரிவர்வே அக்ரோ பார்ம் நிறுவனத்திற்கு ரூ.52 லட்சத்திற்கும் விற்பனை செய்துள்ளார். இது தொடர்பான விவரங்கள் வருமான வரித்துறையிடம் அறிக்கையாக செலுத்தி அவை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்களில் ஜெயலலிதாவுக்கு எந்த பங்களிப்பும் கிடையாது. இவ்வாறு அவர் வாதிட்டார்.
இதனிடையில், சொத்து குவிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள மெடோ அக்ரோ பார்ம், லெக்ஸ் பிராபர்ட்டீஸ், ராமராஜ் அக்ரோ மில்ஸ், ரிவர்வே ஆக்ரோ பார்ம், சைனோரா பிஸ்னஸ், ஜெ.ரியல் எஸ்டேட், ஜெ.எஸ். ஹவுசிங், கிரின் பார்ம் ஹவுஸ் மற்றும் ஜெ. பார்ம் ஹவுஸ் ஆகிய நிறுவனங்களை விடுவிக்கக் கோரி அவற்றின் சார்பில் நேற்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனு இவ்வார இறுதியில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.