முஸ்லிம்கள் சொத்து வாங்க தடை விதித்து பேசவில்லை- தொகாடியா மறுப்பு
டெல்லி: குஜராத்தின் பாவ்நகரில் முஸ்லிம்கள் சொத்து வாங்குவதற்கு தடை விதித்து தாம் பேசியதாக பொய் செய்தி வெளியிட்டதாக கூறி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் பொதுச்செயலர் பிரவீன் தொகாடியா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பாவ்நகரில் முஸ்லிம் தொழிலதிபர் ஒருவர் ஹிந்து ஒருவரின் வீட்டை விலைக்கு வாங்கியுள்ளார். இதற்கு தொகாடியா எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அந்த இடத்தில் முஸ்லிம்கள் காலி செய்ய கெடு விதித்ததாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.
மேலும் அப்படி இடத்தை காலி செய்யாவிட்டால் அந்த வீட்டை ஆக்கிரமித்து பஜ்ரங்தள் போர்டை மாட்டிவிடுவோம் என்று எச்சரித்திருந்தார் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.
இந்த பேச்சு பெரும் கொந்தளிப்பையும் கடும் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் தமது பேச்சை திரித்து வெளியிட்டதாக கூறி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தொகாடியா மறுப்பு நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளார்.
அந்த நோட்டீஸின் நகல் உச்சநீதிமன்றத்துக்கும் குஜராத் முதல்வர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். விளக்கம்
முன்னதாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூத்த தலைவர் ராம் மாதவ் இதுபற்றி கூறுகையில், தொகாடியாவிடம் இதுகுறித்து பேசினேன். அவர் அப்படி எதுவும் தாம் பேசவில்லை. தம்மைப் பற்றி வெளியான செய்திகள் பொய்யானவை . திரித்து கூறப்பட்டவை என்று கூறினார் என்று தெரிவித்திருக்கிறார்.