மோடி சுனாமியில் காணாமல் போன காங். தலைவர்கள்... இப்போ என்னப்பா பண்றாங்க?
டெல்லி: மோடி சுனாமி வந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை அடித்துக் கொண்டு போய் 2 மாதங்களுக்கு மேலாகி விட்டது. அடித்துச் செல்லப்பட்ட கூட்டணி அரசின் அமைச்சர்கள் இப்போது என்ன ஆனார்கள், என்ன செய்கிறார்கள் என்பதை அறியும் ஆவலில் மக்கள் இல்லைதான்.
இருந்தாலும் அவர்கள் என்னதான் செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதில் தவறு இருக்க முடியாதே... முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் முதல் ஏர்போர்ட்டில் நின்றபடி அதிக அளவில் ஏடுகளுக்குப் பேட்டி கொடுத்த நாராயணசாமி வரை என்ன செய்கிறார்கள் என்பதை அறியும் ஒரு சிற்றுலா இது.
கடந்த 2 மாதங்களாகவே இவர்களில் பலரின் சத்தத்தையேக் காணவில்லை. சிலர் மட்டும்தான் தொடர்ந்து ஏதாவது கருத்து தெரிவித்தபடி உள்ளனர். அதுகுறித்துப் பார்க்கலாம்.
மன்மோகன் சிங்...
7 ரேஸ் கோர்ஸ் சாலையை விட்டு, 3, மோதிலால் நேரு இல்லத்திற்கு குடி பெயர்ந்துள்ளார் மன்மோகன் சிங். முன்பாவது அவ்வப்போது ஏதாவது பேசுவார். இப்போது சுத்தமாக இவரது பேச்சைக் காணவில்லை. ராஜ்யசபாவுக்கு வருகிறார். அமைதியாக விவாதங்களைக் கவனிக்கிறார். சத்தம் போடாமல் கிளம்பிச் சென்று விடுகிறார். வீ்ட்டில்தான் பெரும்பாலான நேரத்தை சிங் கழிக்கிறார். டிவி பார்க்கிறார், செய்தி வாசிக்கிறார், குடும்பத்தினரோடு நேரத்தை செலவிடுகிறார்.
கட்சி பக்கமே வருவதில்லை...
காங்கிரஸ் காரியக் கமிட்டியின் உறுப்பினராக இருந்தபோதிலும் கூட மன்மோகன் சிங் கட்சி விவகாரங்களில் தலையிடுவதில்லை. கட்சி அலுவலகத்திற்கும் வருவதாக தெரியவில்லை.
ஏ.கே.அந்தோணி...
முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான அந்தோணி சற்று பரவாயில்லை. அதேசமயம், வீட்டோடுதான் இவரும் பெரும்பாலும் இருக்கிறார். மோடி பிரதமரானதும், தனக்கான பாதுகாப்பை விலக்கிக் கொள்ளுமாறு புதிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் எழுதியவர். ஆனால் அதை ஏற்க மறுத்து வி்ட்டார் ராஜ்நாத் சிங். பாதுகாப்பு தொடரும் என்று கூறி விட்டார். மேலும் பெரிய வீடு வேண்டாம், சிறிய வீடே போதுமானது என்றும் திட்டவட்டமாக அரசிடம் கேட்டுள்ளார்.
தோல்வி குறித்து ஆராய்ச்சி...
இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் தோல்வி குறித்து ஆராயும் பொறுப்பு கட்சி மேலிடம் இவருக்குக் கொடுத்துள்ளது. அந்த வேலையைச் செய்து வருகிறார். பெரிய அறிக்கையை தயார் செய்து வருகிறாராம்.
ப.சிதம்பரம்...
தேர்தலுக்குப் பிறகு அடக்கி வாசிக்கிறார் ப.சிதம்பரம். சில அறிக்கைகளை விட்டுள்ளார். பட்ஜெட் குறித்தும் கருத்து தெரிவித்திருந்தார். தமிழகத்தின் பக்கம் அதிகம் காண முடியவில்லை. கடந்த 10 வருடங்களாக மிஸ் செய்த பல விஷயங்களை தற்போது கவனித்து வருவதாக கேள்வி. இடையில் விட்டிருந்த வக்கீல் தொழிலை மீண்டும் தொடங்கியுள்ளார். அதேசமயம், ஆலோசனை அளவிலேயே இருக்கிறார். கோர்ட்டில் இன்னும் வாதம் புரிய ஆரம்பிக்கவில்லை.
தலைவர் பதவியைப் பிடிக்க ஆர்வம்...
கட்சிப் பணிகளைப் பொறுத்தமட்டில் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியைப் பிடிக்க தீவிரமாக முயன்று வருவதாக கூறப்படுகிறது.
சுஷில் குமார் ஷிண்டே...
லத்தூரில் பெரும் தோல்வியைச் சந்தித்தவர் ஷிண்டே. எதிர்கால அரசியல் இவருக்கு பெரும் இருட்டாகவே இருப்பதாகவே தெரிகிறது. மகாராஷ்டிர முதல்வர் பதவியிலிருந்து பிருத்விராஜ் சவான் நீக்கப்பட்டால் அந்த இடத்திற்கு இவரைப் போடலாம் என்று சோனியாவின் மனதில் எண்ணம் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ஷிண்டேவுக்கு அதில் விருப்பம் இல்லை என்று தெரிகிறது. இப்போதைக்கு மகாராஷ்டிராவிலேயே இருக்கிறார்.
கபில் சிபல்...
படு பிசியாக இருந்த அமைச்சர்களில் ஒருவர் கபில் சிபல். தோல்விக்குப் பின்னர் பேச்சையே காணோம். சமீபத்தில் அதிக வாடகைக்கு இடம் பெயர்ந்ததன் மூலம் மீண்டும் பேச்சில் அடிபட்டார் சிபல். இவரும் மீண்டும் வக்கீல் தொழிலுக்குத் திரும்பியுள்ளார்.
கமல்நாத்...
தேர்தல் தோல்விக்குப் பின்னர் கமல்நாத்தை ஆளையே காணவில்லை. லோக்சபாவுக்கும் வருவதில்லை. கட்சியிலும் ஆர்வமாக ஈடுபடுவதாகவும் தெரியவில்லை.
ஜெயராம் ரமேஷ்...
ஆட்சியில் இருந்தபோது அடிக்கடி பேசி வந்த இவரையும் சுத்தமாக ஆளைக் காணவில்லை. கட்சி அலுவலகத்திற்கும் வருவதில்லை.. எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை என்று பலரும் கிண்டலடிக்கும் நிலைமை.
வீரப்ப மொய்லி...
காங்கிரஸ் சார்பில் வென்ற 44 எம்.பிக்களில் இவரும் ஒருவர். மொய்லி அன்ட் அசோசியேட்ஸ் என்ற பெயரில் டெல்லியில் வக்கீல் தொழிலில் தீவிரமாக இறங்கியுள்ளார். காலை 4 மணிக்கு எழுந்து விடும் அவர் 7 மணி வரை எழுதுகிறாராம். விரைவில் இவரது கன்னடத்தில் வெளியான திரெளபதி நூல், இந்தியில் வெளியாகப் போகிறதாம். ஆங்கிலத்திலும் வருகிறதாம். மேலும் 2 நூல்களையும் அவர் எழுதி வருகிறாராம்.
நாராயணசாமி
சென்னை விமான நிலையத்திலிருந்து நாராயணசாமி என்று நாளிதழ்கள் டேட்லைன் போடும் அளவுக்கு எப்போது பார்த்தாலும் சென்னை விமான நிலையத்தில் பேட்டி கொடுத்து வந்தவரான நாராயணசாமி குறித்து இப்போது சுத்தமாக பேச்சு இல்லை. அவர் புதுவையில் இருக்கிறாரா அல்லது டெல்லியில் இருக்கிறாரா என்பதும் தெரியவில்லை.
பதவி இருந்தால்தான்
பதவி இருந்தால்தான் நமது அரசியல்வாதிகள் புத்துணர்ச்சியோடு இருக்கிறார்கள். பதவி போய் விட்டால் மெத்தனமாகி விடுகிறார்கள் என்பதை நிரூபிக்கிறார்கள் இவர்கள்.
ஆளாளுக்கு ஒரு தொழிலில் பிசி....
இப்படி முன்னாள் மத்திய அமைச்சர்கள் பலரும் தங்களுக்குத் தெரிந்த பிற தொழில்களில் தீவிரமாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் காங்கிரஸ் அலுவலகமும் வழக்கமான கூட்டம் இல்லாமல் கொட்டாவி விட்டபடி இருக்கிறது.
ஜெயராம் ரமேஷ்...
ஆட்சியில் இருந்தபோது அடிக்கடி பேசி வந்த இவரையும் சுத்தமாக ஆளைக் காணவில்லை. கட்சி அலுவலகத்திற்கும் வருவதில்லை.. எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை என்று பலரும் கிண்டலடிக்கும் நிலைமை.