குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் சோனியா காந்தி - லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பாக முறையிடு
டெல்லி: லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜியை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று மாலை சந்திப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று நடந்த காங்கிரஸ் எம்.பிக்களின் ஆலோசனைக் கூட்டத்தின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
போதிய எம்.பிக்கள் இல்லாத காரணத்தால் காங்கிரஸ் கட்சிக்கு பிரதான எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. ஆனால் பாஜகவுக்கு அடுத்த பெரிய கட்சியான தங்களுக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி தரப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கோரி வருகிறது.
லோக்சபா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இதுதொடர்பாக லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு தொடர்ந்து மனுக்களைக் கொடுத்தவண்ணம் இருக்கிறார்.
இந்த நிலையில் இன்று டெல்லியில் காங்கிரஸ் எம்.பிக்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் சோனியா காந்தி கலந்து கொண்டார். எதிர்க்கட்சித் தலைவர் பதவி பிரச்சினை தொடர்பாக முக்கியமாக விவாதிக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்கும் உரிமை காங்கிரஸுக்கே உள்ளது. எனவே தொடர்ந்து போராடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.
மேலும் இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து முறையிடவும் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி இன்று மாலை குடியரசுத் தலைவரை சோனியா காந்தி தலைமையிலான குழு சந்தித்துப் பேசவுள்ளது.