பெங்களூர் பந்த் முடிந்தது: தமிழக பஸ்கள் ஓடத் தொடங்கின
பெங்களூர்: பெங்களூர் பள்ளியில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உள்பட பலாத்கார சம்பவங்கள் அதிகரித்துள்ளது, மகாராஷ்டிர ஏகி கிரன், சிவசேனை கட்சிகளால் கன்னடர்கள் தாக்கப்படுவது உள்ளிட்டவற்றை கண்டித்து 50 கன்னட அமைப்புகள் இன்று பெங்களூர் பந்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. இதையடுத்து பெங்களூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தினமும் 600 பஸ்கள்
தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பெங்களூருக்கு தினமும் 600 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் சேலம், விழுப்புரம் உள்ளிட்ட பல கோட்டங்களை சேர்ந்த பஸ்கள் மட்டுமின்றி, அரசு விரைவு பேருந்துகளும் அடங்கும். இவைதவிர கர்நாடக அரசு பேருந்துகளும் கணிசமாக இயக்கப்படுகின்றன.
ஜூஜுவாடியில் நிறுத்தம்
பெங்களூரில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை பந்த் நடைபெற்றதால், தமிழகத்தில் இருந்து பெங்களூருக்கு வந்த பஸ்கள் இரு மாநில எல்லையான ஒசூரை அடுத்த ஜூஜுவாடியில் நிறுத்தப்பட்டன. மாலை 6 மணிக்கு மேல்தான் அவை பெங்களூருக்குள் இயக்கப்பட்டன.
நெரிசலில் சிக்கிய பயணிகள்
ஜூஜுவாடியில் இறக்கிவிடப்பட்ட தமிழக பஸ் பயணிகள், அங்கிருந்து நடந்தே பெங்களூரின் புறநகர் பகுதியான அத்திபெலேவுக்கு வந்தனர். அங்கிருந்து பெங்களூர் நகர பேருந்துகளிலும், கர்நாடக அரசு பேருந்துகளிலும் தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு பயணித்தனர்.தாக்குதல் அச்சத்தால், பெங்களூர் நகர பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்பட்டதால், தமிழக பயணிகள் கடும் கூட்ட நெரிசலில் சிக்கியபடி நகருக்குள் வந்து சேர்ந்தனர். இதனால் அவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
பெங்களூரில் தர்ணா
சிலர் ஒசூர் பேருந்து நிலையத்தில் இருந்து கர்நாடக அரசு பேருந்துகள் மூலமாகவும் பெங்களூர் வந்தனர். அவையும் குறைந்த அளவில் இயக்கப்பட்டதால் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனிடையே பெங்களூர் நகர பந்த், நேரம் ஆக ஆக சூடுபிடிக்க தொடங்கியது. கர்நாடக ரக்ஷனவேதிகே அமைப்பினர் நகரின், டவுன்ஹால் பகுதியில் பெரும் போராட்டம் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கானோர் கைகளில் பெண் குழந்தைகளை ஏந்தியபடி கலந்துகொண்டனர்.
பஸ்கள் மீது கல்வீச்சு
காலை முதல், நகர பேருந்துகள் மீது எந்த வித தாக்குதலும் நடத்தப்படாததால் பஸ்கள் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரித்தது பெங்களூர் நகர போக்குவரத்து கழகம். இந்நிலையில், 11 மணியளவில், பெங்களூர்-ஒசூர் சாலையிலுள்ள சந்தாபுரா பகுதியில் நகர பேருந்து மீது விஷமிகள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதேபோல ஹெப்பாலில் இருந்து சிவாஜிநகர் வந்து கொண்டிருந்த நகர பஸ் மீது டேனரி ரோடு பகுதியில் மர்ம நபர்கள் கல்வீச்சு நடத்தினர். இதனால் பஸ்கள் எண்ணிக்கையை போக்குவரத்து கழகம் படிப்படியாக குறைக்கப்பட்டது. மாலை 6 மணிக்கு மேல் வழக்கம்போல இயக்கப்பட்டது.
சிவசேனையை தடை செய்க
இதுகுறித்து பந்த் அமைப்பாளர் வாட்டாள் நாகராஜ் நிருபர்களிடம் பேசுகையில், பெங்களூர் மக்கள் பந்த்துக்கு ஆதரவு அளித்தது மகிழ்ச்சியளித்தது. சிவசேனை, எம்.இ.எஸ் கட்சிகள் தடை செய்யப்பட வேண்டும் என்றார்.
காவல்துறை எச்சரிக்கை
பந்த் நடுவே பெங்களூர் நகர போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி அளித்த பேட்டியில், "ஆர்ப்பாட்டங்கள் அமைதியான முறையில் நடத்தப்பட்டால் அதில் போலீஸ் தலையிடாது. பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பதோ, சட்டம் ஒழுங்கை கெடுப்பதோ கடும் தண்டனைக்குறிய குற்றமாகும். அதுபோன்ற செயல்களில் ஈடுபடும் விஷமிகள் ஒடுக்கப்படுவார்கள்" என்றார்.