மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: பாஜக -130; சிவசேனா 151 தொகுதிகளில் போட்டி- முடிவுக்கு வந்த இழுபறி!!
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் கடும் இழுபறிகளுக்குப் பின்னர் சிவசேனா 151, பாஜக 130 தொகுதிகளில் போட்டியிட இரு கட்சிகளும் ஒப்புக் கொண்டுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது.
மகாராஷ்டிரா மாநில சட்டசபைத் தேர்தல் அடுத்த மாதம் 15-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 25 நாட்களே உள்ள நிலையில் அங்கு தொகுதி பங்கீடு தொடர்பான கூட்டணி பேச்சுவார்த்தைகளில் கடும் இழுபறி நீடித்தது.
அமித்ஷா- உத்தவ் பேச்சு
பா.ஜ.க-சிவசேனா இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் இழுபறி நீடித்ததால் கடைசி நிமிடம் வரை கூட்டணியை காப்பாற்ற முயற்சி செய்யுங்கள் என தங்கள் கட்சி தலைவர்களை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து பாஜக தலைவரான அமித் ஷா, உத்தவ் தாக்கரேவை நேற்று தொடர்பு கொண்டு பேசினார்.
கூட்டணி முறியும்- தனித்துப் போட்டி
ஆனாலும் சிவசேனா இறங்கி வராததால் பாஜகவுடனான கூட்டணி முறியக் கூடும் என்றும் பாஜக தனித்துப் போட்டியிடலாம் என்ற உச்சகட்ட நிலை உருவானது.
130க்கு இறங்கிய பாஜக
இதன் பின்னர் மகாராஷ்டிரா மாநில பா.ஜ.க பொறுப்பாளரான ராஜிவ் பிரதாப் ரூடி தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக கோரிக்கை ஒன்றை நேற்று சிவனோவுக்கு முன் வைத்திருந்தார், அதன்படி தாங்கள் ஏற்கனவே கோரியிருந்த 135 தொகுதிகளுக்கு பதிலாக 5 ஐந்து தொகுதிகளை குறைத்துக்கொண்டு 130 தொகுதிகளை பெற்றுக்கொள்கிறோம் என்று கூறியிருந்தார்.
தோற்கும் தொகுதியை கொடுங்க..
அத்துடன் தோற்கக்கூடிய தொகுதிகளை கூட எங்களுக்கு கொடுங்கள் என்றும் ரூடி கேட்டிருந்தார். அதே நேரத்தில் கேட்ட எண்ணிக்கையை தாருங்கள் என்று அவர் வலியுறுத்தி இருந்தார்.
சந்திப்பு
இதனைத் தொடர்ந்து இன்று இரு கட்சிகளின் பிரதிநிதிகளும் மும்பையில் இன்று நேரில் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பைத் தொடர்ந்து இரு கட்சிகளிடையே நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.
எத்தனை தொகுதிகள்?
இந்த சந்திப்பின் போது பாஜக 130 தொகுதிகள், சிவசேனா 151 தொகுதிகளில் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதர 3 சிறு கூட்டணிக் கட்சிகளுக்கு 7 தொகுதிகள் ஒதுக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
மாலையில் அறிவிப்பு
இந்த தொகுதி உடன்பாடு குறித்து இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது.