மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: காங்-தேசியவாத காங். கூட்டணியிலும் சிக்கல்! காங். தனித்துப் போட்டி?
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸூடன் தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மத்தியக் குழு இன்று ஆலோசித்து முடிவு எடுக்கவுள்ளது.
288 தொகுதிகளில் 144 தொகுதிகளுக்கு குறைவாக ஒதுக்கும் எந்த முடிவையும் ஏற்கப்போவதில்லை என்பது தேசியவாத காங்கிரஸ் நிலைப்பாடு. ஆனால் இதனை காங்கிரஸ் ஏற்கவில்லை. 124 தொகுதிகள்தான் ஒதுக்க முடியும் என்கிறது காங்கிரஸ்.
இந்த சிக்கலாம் இரு கட்சிகளும் தேர்தலில் இணைந்து போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியில் இன்று அறிவிக்கப்படும் என, முதலமைச்சர் பிருத்விராஜ் சவாண் தெரிவித்துள்ளார்.
இதனால் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடக் கூடும் எனத் தெரிகிறது. ஏற்கெனவே பாஜக- சிவசேனா கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பாஜக தனித்துப் போட்டியிடலாம் என்று கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் காங்கிரஸும் தனித்துப் போட்டியிட்டால் மகாராஷ்டிரா தேர்தலில் பலமுனைப் போட்டி உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.