டெல்லியில் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி வீட்டில் பணிப்பெண் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை
டெல்லி: டெல்லியில் உள்ள பெண் ஐஏஎஸ் அதிகாரியின் வீட்டில் வேலை செய்த 25 வயது பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தெற்கு டெல்லியில் உள்ள புதிய மோதி பாக் பகுதியில் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் வசித்து வருகிறார். அவரது வீட்டில் சசி(25) என்ற பெண் வேலை செய்து வந்தார். இந்நிலையில் அவர் நேற்று இரவு பணியாட்கள் குடியிருப்பில் மின்விசிறியில் தனது துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சசியை தேடி குடியிருப்புக்கு சென்ற மற்றொரு பணிப்பெண் அவர் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
சசி தற்கொலை செய்யும் முன்பு கடிதம் எதுவும் எழுதி வைத்ததாக தெரியவில்லை. அவர் குடும்ப பிரச்சனை காரணமாக மன அழுத்தத்தில் இருந்துள்ளார். அவர் கடந்த 5 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரியின் வீட்டில் வேலை செய்துள்ளார். அவர் அண்மையில் தான் உத்தர பிரதேசத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்று வந்துள்ளார் என்றார்.