மலையாளம் தெரிந்தால் மட்டுமே இனி, கேரளாவில் அரசு வேலை: உம்மன்சாண்டி அறிவிப்பு
நேற்று திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசின் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில், பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் அரசு வேலையில் சேரும் பொது பிரிவினருக்கான வயது வரம்பை 38 ஆக உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இனி பொதுப்பிரிவினர் 41 வயது வரை அரசு வேலையில் சேரலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. அதேபோல், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட 41 வயது என்பதை 44 வயது என்றும், தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான 43 என்ற வயது வரம்பை இனி 46 என்று உயர்த்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
மேலும், அமைச்சரவைக் கூட்டம் குறித்து அம்மாநில முதலமைச்சர் உம்மன்சாண்டி தெரிவித்ததாவது, ‘கேரளாவில் அரசு பணியில் சேருவதற்கு மலையாள மொழி தெரிந்து இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படுகிறது. இது தொடர்பாக கேரள அரசு பணியாளர் தேர்வாணைய விதிமுறைகளில் போதுமான மாற்றங்கள் செய்யப்படும்.
அரசு பணியில் இனி மலையாளம் தெரிந்தவர்கள் மட்டுமே சேர முடியும். தமிழக, கர்நாடக எல்லைப் பகுதிகளில் தமிழ் மற்றும் கன்னடம் தெரிந்து பணியில் இருப்பவர்கள் மலையாள மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்.
10-ம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு வரை மலையாள மொழி பயிலாதவர்களாக இருந்தால் அவர்கள் ‘சிறப்பு மொழி தேர்வு' எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இவ்வாறு தேர்ச்சி பெற்றவர்களுக்கே பதவி உயர்வு வழங்கப்படும்.
தற்போது இந்த தகுதியை பெற 10 ஆண்டு கால நிர்ணயம் விதிக்கப்பட்டுள்ளது. அது தொடர்ந்து நீடிக்கும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.