போலீஸ் ஹெல்ப்லைனுக்கு கிளுகிளு படங்களை அனுப்பிய நபர் கைது
டெல்லி: டெல்லியில் உள்ள ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸ் ஹெல்ப் லைனுக்கு வாட்ஸ் ஆப்பில் கிளு கிளு படங்களை அனுப்பிய நபரை போலீசார் கைது செய்தனர்.
டெல்லியில் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள், ஊழியர்களை வளைப்பதற்கு, பொது மக்களுக்கான அவசர உதவி தொலைப்பேசி எண்கள் உள்ளன.
இந்த ஹெல்ப்லைனுக்குத் தொடர்புகொண்டு விஷயத்தைச் சொன்னால், பாதிக்கப்பட்ட நபரே புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, லஞ்சம் கேட்டவரை ஆதாரத்துடன் சிக்க வழிவகுக்கப்படும். அதற்கான வழிகாட்டுதல்களை டெல்லி ஊழல் தடுப்புப் படை வழங்கும்.
மக்கள் தங்கள் செல்போன் மூலமே லஞ்ச முறைகேடுகளைப் பதிவு செய்யலாம். லஞ்சம் பெறும் காவல்துறை அதிகாரிகள் குறித்தும் இந்த ஹெல்ப்லைன் மூலம் புகார் தெரிவிக்கலாம். இதனை அறிமுகப்படுத்தியவர் டெல்லியில் 49 நாட்கள் முதல்வராக இருந்த அரவிந்த கெஜ்ரிவால்.
இந்த ஹெல்ப்லைன் பிரிவுக்கு வாட்ஸ் ஆப் மூலம் கிளுகிளு படங்களை அனுப்பி போலீசை கிறுகிறுக்க வைத்துள்ளார் ஒரு குடிகாரர். இதை கண்டு வெல வெலத்துப்போன போலீசார் அந்த நபரை கண்டுபிடித்து கைக்கு காப்பு போட்டனர். இப்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார் அந்த நபர்.