ஜார்க்கண்ட்: கழிவறை கட்டாவிட்டால் விவாகரத்து செய்வேன்: கணவனை மிரட்டிய மனைவி
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெண் ஒருவர் வீட்டில் கழிவறை கட்டாவிட்டால் விவாகரத்து செய்துவிடுவேன் என்று மிரட்டியதால் கணவர் அரசு அதிகாரிகளை அணுகி தனக்கு உதவி செய்யுமாறு கேட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ரது பிளாக்கில் உள்ள லூனா பஞ்சாயத்துக்குட்பட்ட முக்மந்தரோ கிராமத்தைச் சேர்ந்தவர் ஓரோன். பழங்குடியினத்தைச் சேர்ந்த அவருக்கும் கார்மி என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர்களின் வீட்டில் கழிப்பறை இல்லை. அதனால் கழிப்பறை ஒன்றை கட்டித் தருமாறு கார்மி தனது கணவரிடம் கோரிக்கை விடுத்து வந்துள்ளார்.
கழிவறை கட்ட பணம் இல்லாததால் ஓரோன் மனைவியின் கோரிக்கையை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதையடுத்து கார்மி உடனே கழிவறை கட்டிக் கொடுக்காவிடில் ஓரோனை விவாகரத்து செய்யப் போவதாக தெரிவித்தார். இதனால் மிரண்டு போன ஓரோன் உள்ளூர் அரசு அதிகாரிகளை அணுகி தனது திருமணத்தை காப்பாற்ற கழிவறை கட்டித் தருமாறு கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்ற அதிகாரிகள் அவரது வீட்டில் விரைவில் கழிவறை கட்டித் தர உத்தரவிட்டுள்ளனர்.
முக்மந்தரோ கிராமத்தில் ஒரு சில வீடுகளில் தான் கழிவறை உள்ளது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அரசு கட்டிய மேற்கூரை இல்லாத கழிவறைகளில் தண்ணீர் இல்லாததால் அவை பயன்படுத்தப்படாமல் உள்ளது.
இது குறித்து பஞ்சாயத்து தலைவி சில்வந்தி தேவி கூறுகையில்,
வீட்டில் கழிவறை கட்டும் பழக்கம் இங்கு இல்லை. முக்மந்தரோ கிராமத்தில் மொத்தம் உள்ள 250 வீடுகளில் சிலற்றில் தான் கழிவறைகள் உள்ளன என்றார்.