20 'சயனைடு' கொலைகள்.. மங்களூர் மோகனுக்கு தூக்கு!
மங்களூர்: கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 20 பெண்களை சயனைடு கொடுத்து கொலை செய்த குற்றவாளி மோகனுக்கு மங்களூர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது.
கர்நாடகாவில் மங்களூர் மாவட்டத்தில் உள்ள பன்ட்வால் தாலுகாவை சேர்ந்தவர் மோகன். இவருக்கு 3 மனைவிகள், 2 குழந்தைகள். உடற்கல்வி ஆசிரியர் படித்து முடித்த மோகன், பன்ட்வால் பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்தார்.
முதலில் 2005ம் ஆண்டு பன்ட்வாலை சேர்ந்த இளம்பெண் ஒருவரை திருமண செய்வதாக ஆசை காட்டி, தர்மஸ்தலாவுக்கு அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்தார். பின்னர், அவரை ஆற்றில் தள்ளி கொல்ல முயன்றார். இதில், அந்த பெண் தப்பினார். அவர் கொடுத்த புகாரின் பேரில் 2005ம் ஆண்டு மோகனை போலீசார் கைது செய்தனர். இதனால், வேலையை இழந்தார்.
ஜாமீனில் வெளியே வந்த மோகனுக்கு பொருளாதார நெருக்கடி அதிகமானது. அப்போது, இளம்பெண்களை ஏமாற்றி நகைகளை மோசடி செய்யும் சிந்தனை தோன்றியது. இளம்பெண்கள், வசதி படைந்த பெண்களை குறி வைக்க தொடங்கினான்.
பஸ் நிலையம், கோயில்களுக்கு சென்று இளம் பெண்களுக்கு வலை வீசினான். அதில், வனிதா பூஜாரி என்ற பெண் முதலில் சிக்கினார். அவரை பாலியல் பலாத்காரம் செய்த பிறகு சயனைடு கொடுத்து கொன்றான். பின்னர் வலையில் விழுந்த சவித்ரா என்ற பெண்ணையும் இதே பாணியில் கொன்றான்.
இதை தொடர்ந்து லீலாவதி, சசிகலா மடிவாளா, சாந்தா முன்டல் , கமலா நாயக், சசிகலா பூஜாரி, பூர்ணிமா ஆச்சாரி, ஆர்த்தி , சுஜாதா பண்டாரி, பேபி நாயக் , சுனந்தா பூஜாரி , சாரதா கவுடா , காவேரி , ஹேமாவதி கவுடா , விஜயலட்சுமி நாயக் , அனிதா , புஷ்பா ஆச்சாரி , வனிதா , யசோதா பூஜாரி ஆகியோரை திருமணம் செய்து கொள்வதாகவும், வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி லாட்ஜுகளுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்து கொன்றான்.
கொலையை விசாரித்த போலீசார் லாட்ஜில் பதிவாகி இருந்த முகவரிகள் மற்றும் சி.சி.டிவி கேமராவில் பதிவான அடையாளங்களை வைத்து 2010ம் ஆண்டு மோகனை கைது செய்தனர்.
மங்களூர் 4வது கூடுதல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. நீதிபதி பி.கே. நாயக் வழக்கை விசாரித்தார். கடந்த 17ந் தேதி இறுதி விசாரணை நடந்தது. அன்றைய தினம் அளித்த தீர்ப்பில், மோகனை நீதிபதி குற்றவாளியாக அறிவித்தார்.
கொலை, கடத்தல், மோசடி உள்பட பல வழக்கில் தொடர்பு இருந்ததால் மோகனுக்கு தூக்கு தண்டணை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.