75% பயணத்தை நிறைவு செய்த மங்கள்யான்: செவ்வாயை நோக்கி நெருங்குகிறது!
ஸ்ரீஹரிகோட்டா: செவ்வாய்க் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம், 75 சதவிகித பயணத்தை நிறைவு செய்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சை மையமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ரூ.450 கோடி செலவில் உருவாக்கப்பட்ட மங்கல்யான் விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-25 ராக்கெட் மூலம் கடந்த ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி மங்கள்யான் விண்ணில் ஏவப்பட்டது.
மங்கல்யானின் பயணம்
செவ்வாய் கிரகத்தில் உயிர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள், கனிம வளம், தண்ணீர் இருப்பதற்கான தடயங்கள் போன்றவற்றை ஆராய்வதற்காக மீத்தேன் சென்சார் உள்ளிட்ட 5 கருவிகளுடன் இந்த விண்கலமானது பயணம் மேற்கொண்டுள்ளது.
செவ்வாயை நெருங்கிய மங்கல்யான்
செவ்வாய் கிரகத்தை அடைய 300 நாட்கள் ஆகும் என்று கூறப்பட்ட நிலையில், மங்கல்யான் இதுவரை 510 மில்லியன் கி.மீ. தூரம் பயணித்துள்ளதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புவி வட்டப்பாதையில்
இந்த விண்கலத்தை அதன் புவி வட்டப் பாதையில் சீராகச் செல்ல வைக்கும் விதமாக, கடந்த மாதம் 11ஆம் தேதி சில மேம்பாட்டுப் பணிகள் செய்யப்பட்டன. அடுத்த கட்டப் பணிகள் அடுத்த மாதத்தில் மேற்கொள்ளப்பட உள்ளன.
செப்டம்பர் 24ல் செவ்வாய்
மங்கள்யான் விண்கலமானது செப்டம்பர் 24ஆம் தேதி செவ்வாய்க் கிரகத்தை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.