ஒரே வாரத்தில் அடுத்தடுத்து ராஜினாமா! மணிப்பூர் ஆளுநரும் திடீர் பதவி விலகல்!!
இம்பால்: கேரளா ஆளுநர் ஷீலா தீட்சித் பதவி விலகிய நிலையில் மணிப்பூர் ஆளுநர் வினோத் குமார் துக்கல் நேற்று முன் தினம் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் ஆளுநராக நியமிக்கப்பட்டவர்கள் தங்களது பதவியை தொடர்ச்சியாக ராஜினாமா செய்து வருகின்றனர்.
அந்த வரிசையில் பதவியை ராஜிநாமா செய்யும் 9ஆவது ஆளுநர் வினோத் குமார் துக்கல். மிசோரம் மாநில ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாகக் கவனித்து வந்த அவர், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை டெல்லியில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் துக்கல் கூறுகையில், "எனது சொந்த விருப்பத்தின் படியே பதவியை ராஜினாமா செய்தேன் என்றார்.
முன்னதாக கேரள ஆளுநராக இருந்த ஷீலா தீட்சித், செவ்வாய்க்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். ஒரே வாரத்தில் 2 ஆளுநர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.