2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் மக்கள் நன்மைக்காகவே விடப்பட்டது: ஆ.ராசா
டெல்லி: மக்கள் நலன் கருதி முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 2ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டதாக முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா கூறியுள்ளார். டெல்லி சி.பி.ஐ நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக இன்று சாட்சியம் அளித்த அவர், இந்த விவகாரம் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கு தெரியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பான ஊழல் வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு சாட்சியமாக தன்னை சேர்க்கக் கோரி நீதிமன்றத்தில் ராசா மனு தாக்கல் செய்திருந்தார்.
அதற்கு சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி அனுமதி அளித்தார். இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட தனது தரப்பிலான முதலாவது சாட்சியாக அவரே செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
ஏலமின்றி ஒதுக்கியது ஏன்?
அப்போது, மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தபோது தனது பணி குறித்தும், 2ஜி அலைக்கற்றையை ஏலமின்றி தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்குவதற்கு என்ன காரணம்? என்பது போன்ற விவரங்களை ராசா விளக்கினார்.
51 நிறுவனங்களுக்கு உரிமம்
நான் மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சராக பதவி வகித்துள்ளேன். கடந்த 2007-ஆம் ஆண்டு தகவல் தொடர்பு அமைச்சராக இருந்தபோது, 51 நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு அலைவரிசை உரிமம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு உரிமம் யாருக்கும் வழங்கப்படவில்லை.
575 விண்ணப்பங்கள்
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரை வந்தபின், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அப்போது 575 விண்ணப்பங்கள் வந்தன. இதுவரை தொலைத்தொடர்புத்துறை வரலாற்றில் இல்லாத வகையில், அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்ததால், ஒதுக்கீடு குறித்து முடிவு செய்ய சட்டத்துறை அமைச்சகத்தின் கருத்து கேட்கப்பட்டது.
அனைவருக்கும் தெரியும்
சட்டத்துறை அமைச்சகம் அளித்த பரிந்துரை நடைமுறைக்கு சாத்தியமாக இல்லாததால், அதிகாரிகள் அளவில் நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து (அப்போதைய) பிரதமர் மன்மோகன்சிங்கை அவரது வீடு, அலுவலகத்தில் சந்தித்து விளக்கினேன். வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜியை சந்திக்கும்படி கூறினார். அவரையும் சந்தித்து விளக்கம் அளித்தேன். சட்டத்துறை அமைச்சராக இருந்த பரத்வாஜுக்கும் ஒதுக்கீடு முறை குறித்து விளக்கம் அளித்தேன். இவ்வாறு சாட்சியம் பதிவு செய்தார்.
புதன்கிழமைக்கு ஒத்திவைப்பு
மதிய உணவு இடைவேளைக்கு சில மணி நேரம் முன்பாக, தனக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி சாட்சியத்தை புதன்கிழமை தொடர்ந்து பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனியிடம் ராசா கேட்டுக் கொண்டார். அதை ஏற்று, ராசாவிடம் புதன்கிழமை தொடர்ந்து சாட்சியம் பதிவு செய்யப்படும் என்று நீதிபதி சைனி கூறினார்.
மக்கள் நன்மைக்காகவே முன்னுரிமை
இரண்டாவது நாளாக இன்று சாட்சியம் அளித்த ராசா, மக்கள் நலன் கருதி முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 2ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டது என்றும், ஏலம் குறித்த முடிவு தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது என்றும், நிறுவனங்களின் சீனியாரிட்டி, தகுதி அடிப்படையில் 2ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டது என்றும் கூறினார். இந்த வழக்கில் ஆ.ராசாவின் சாட்சியம் இன்றுடன் முடிவடைந்தது.
ராசா தரப்பு சாட்சிகள்
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராசா, தனது தரப்பு சாட்சிகளாக லோக்சபா செயலக இணை இயக்குநர் ஜே.பி.எஸ்.ராவத், மத்திய சுங்கம், கலால் மற்றும் சேவை வரி வழக்குகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் கூடுதல் ஆணையர் ரஞ்சன் கண்ணா ஆகியோரை சேர்த்துள்ளார்.
சாட்சியம் பதிவு
இதில் ரஞ்சன் கண்ணா, 2010-14 ஆண்டுகள் வரை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த கபில் சிபலின் தனிச் செயலராக பணியாற்றியவர். இவர்கள் இருவரும் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகி தங்கள் தரப்பு சாட்சியங்களைப் பதிவு செய்துள்ளனர்.
2ஜி அலைக்கற்றை விவகாரம் தொடர்பாக லோக்சபாவில் 2007, நவம்பர் 26, 2010, பிப்ரவரி 22, 2011, பிப்ரவரி 21 ஆகிய தேதிகளில் நடைபெற்ற விவாதங்களின் தொகுப்புகளை சிபிஐ நீதிமன்றத்தில் ஜே.பி.எஸ்.ராவத் தாக்கல் செய்தார்.
எஞ்சியவர்களின் சாட்சியம்
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மத்திய தொலைத்தொடர்பு துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெஹுரா, ஸ்வான் டெலிகாம் மேம்பாட்டாளர் ஷாஹித் உஸ்மான் பல்வா, யூனிடெக் நிறுவன நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் ஏடிஏஜி நிர்வாகிகளான சுரேந்திர பிப்பாரா, ஹரி நாயர், சினியூக் பட நிறுவன அதிபர் கரீம் மொரானி, கலைஞர் டிவி முன்னாள் இயக்குநர் சரத்குமார் ஆகியோர் சார்பில் ஆஜராகும் சாட்சிகளின் சாட்சியம் பதிவு செய்யப்படும். இதேபோல, குற்றம் சாட்டப்பட்டுள்ள தனியார் நிறுவனங்களான யுனிடெக் வயர்லெஸ் (தமிழ்நாடு) நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் அவற்றின் சாட்சிகளிடமும் சாட்சியம் பதிவு செய்யப்படும்.