மாவோயிஸ்டுகளுக்கு ஐரோப்பாவில் இருந்து உதவி: மத்திய அமைச்சர் 'திடுக்' தகவல்
டெல்லி: மாவோயிஸ்டுகளுக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து உதவி கிடைப்பதாக உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
லோக்சபாவில் நேற்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ கூறியதாவது:
மாவோயிஸ்டுகளில் மூத்த தளபதிகள் சிலருக்கு பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி 2005ஆம் ஆண்டு பயிற்சி அளித்தது. இந்திய அரசுக்கு எதிராக மக்கள் யுத்தம் என்ற பெயரில் மாவோயிஸ்டுகள் நடத்தி வரும் வன்முறை செயல்களுக்கு ஜெர்மனி, பிரான்ஸ், ஹாலந்து, துருக்கி மற்றும் இத்தாலி நாடுகளில் இருந்து உதவிகள் கிடைக்கின்றன.
மாவோயிஸ்டுகளுக்கு பிலிப்பைன்ஸ் மற்றும் துருக்கியில் உள்ள மாவோயிஸ்ட் அமைப்புகளுடன் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. பிடிபட்ட மாவோயிஸ்டுகளிடம் இருந்து வெளிநாட்டு ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல் மாவோயிஸ்டுகளுக்கு வெளிநாட்டில் இருந்தும் நிதி உதவி கிடைத்து வருகிறது.
இவ்வாறு கிரண் ரிஜ்ஜூ கூறினார்.