சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்: 7 தேர்தல் பணியாளர்கள் உட்பட 14 பேர் பலி
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய இருவேறு தாக்குதல்களில் லோக்சபா தேர்தல் பணியாளர்கள் 7 பேர் உட்பட 14 பேர் பலியாகி உள்ளனர்.
தேர்தல் பணியாளர்கள் 7 பேர், துணை ராணுவப் படையினர் 5 பேர், ஓட்டுநர் ஒருவர், மருத்துவ உதவியாளர் ஒருவர் என 14 பேர் உயிரிழந்தனர். துணை ராணுவப் படையினர் 5 பேர் உள்பட 10 பேர் காயமடைந்தனர்.
தேர்தல் குழுவினர் பயணம் செய்த பேருந்து மீதும், பாதுகாப்புப் படையினர் பயணம் செய்த ஆம்புலன்ஸ் மீதும் கண்ணிவெடித்தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகள் படுகாயமடைந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியாலும் சுட்டனர்.
7 தேர்தல் பணியாளர்கள் பலி: இது தொடர்பாக காவல்துறை கூடுதல் இயக்குநர் ஆர்.கே. விஜ் கூறுகையில்,
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பஸ்தர் தொகுதியில் கடந்த 10ந் தேதி தேர்தல் நடைபெற்றது. அந்தத் தொகுதிக்கு உள்பட்ட பீஜப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பணிகளை முடித்து விட்டு நேற்று காலை 11 மணியளவில் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புடன் தேர்தல் குழுவினர் பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
கேதுல்நார் என்ற இடத்தில் அப் பேருந்து சென்ற போது மாவோயிஸ்டுகள் மறைத்து வைத்திருந்த கண்ணிவெடிகளை வெடிக்கச் செய்தனர். அதில் பேருந்து தூக்கி வீசப்பட்டது.
அப்போது அந்தப் பகுதியில் பயங்கர ஆயதங்களுடன் சூழ்ந்துகொண்ட 100 மாவோயிஸ்டுகள் கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கியவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். அவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் திருப்பிச் சுட்டதை அடுத்து வனப்பகுதிக்குள் தப்பியோடிவிட்டனர்.
இந்தத் தாக்குதல் நடைபெற்ற இடத்திலேயே தேர்தல் பணியாளர்கள் 7 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த துணை ராணுவப்படையினர் 5 பேரும், ஒரு தேர்தல் பணியாளரும் பீஜப்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு மற்றொரு தேர்தல் பணியாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று கூறினார்.
அடுத்தடுத்து தாக்குதல்
இந்தச் சம்பவம் நடைபெற்ற ஒரு மணி நேரத்துக்குள், தேர்தல் பாதுகாப்புப் பணிகளை முடித்து கொண்டு ஜக்தால்பூர் மாவட்டத்துக்கு ஆம்புலன்ஸில் திரும்பிக் கொண்டிருந்த துணை ராணுவப் படையினர் மீது காமனர் என்ற கிராமத்தில் மாவோயிஸ்டுகள் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் சிக்கிய துணை ராணுவப் படையினர் மீதும் மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் துணை ராணுவப் படையினர் 5 பேரும், ஓட்டுநர் ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மருத்துவ உதவியாளர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.