ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: குற்றப்பத்திரிகையில் பெயரை சேர்க்க தயாநிதி மாறன் எதிர்ப்பு!!
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை உரிமம் கேட்ட ஏர்செல் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் பங்குகளை, மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்க வலியுறுத்தினார் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் என்பது புகார்.
அப்படி மேக்சிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல் கைமாறியதைத் தொடர்ந்து தயாநிதி மாறனின் சகோதரர் நிறுவனத்தில் மேக்சிஸ் பல நூறு கோடி முறைகேடு செய்தது என்பதும் குற்றச்சாட்டு. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை எந்த நேரத்திலும் தாக்கல் செய்யப்படலாம் என்று கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் தனது பெயரை சேர்க்கக்கூடாது எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் தயாநிதி மாறன் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கின் விசாரணை முடியும் முன்னேரே சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறியுள்ள மாறன், அரசியல் காரணங்களுக்காகவே இப்படி நடைபெறுவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இந்த வழக்கு தொடர்பான தகவல்களை மலேசிய அதிகாரிகளிடம் இருந்து சிபிஐ இதுவரை பெறவில்லை என்றும் தனது மனுவில் மாறன் குறிப்பிட்டுள்ளார்.
தயாநிதி மாறன் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையை விரைந்து நடத்துமாறு அவரது வழக்கறிஞர்கள் அமேந்திரா சரண் மற்றும் சோமேஷ் ஷா ஆகியோர் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதாவைக் கேட்டுக்கொண்டனர்.
ஆனால் வழக்கு விசாரணையை நடத்தி வரும் நீதிபதி டட்டு தலைமையிலான பெஞ்ச் முன் கோரிக்கையை முன்வைக்குமாறு தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா அறிவுறுத்தியுள்ளார்.