பள்ளிப்பாடத்தில் பகவத் கீதை: சுப்ரீம் கோர்ட் நீதிபதி தவே கருத்துக்கு கட்ஜூ கடும் எதிர்ப்பு!
டெல்லி: பள்ளிப் பாடத்தில் பகவத் கீதையை சேர்க்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர். தவே பேசியதற்கு முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.தவே, இந்திய இளைஞர்கள் ஒழுக்கமான வாழ்க்கை வாழ வேண்டுமெனில், பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் இருந்தே பகவத்கீதை, மகாபாரதம் உபதேசங்களை சேர்க்க வேண்டும். நான் சர்வாதிகாரியாக இருந்தால், இந்த திட்டத்தை கட்டாயமாக அமல்படுத்துவேன்' என்றார்.
இதற்கு உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும் பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்கண்டேய கட்ஜு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கட்ஜூ, நீதிபதியின் இந்த ஆலோசனை இந்தியாவின் மதச்சார்பின்மை கொள்கைக்கும், அரசியலைமைப்பு சட்டத்துக்கும் எதிரானது ஆகும்.
இந்த திட்டம் பின்பற்றப்பட்டால் எதிர்காலத்தில் பெரும் தீங்கு ஏற்படும். கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இப்படி செய்தால், வருங்காலத்தில் பைபிளை சேர்க்க வேண்டும் என்று கிறிஸ்தவர்களும், குரானை சேர்க்க வேண்டும் என்று முஸ்லிம்களும் கோரிக்கை விடுப்பார்கள் என்றார்.