ஓட்டுப் போடாமல் வீட்டுக்குள் முடங்கிய சென்னை, மும்பை பெருநகரவாசிகள்!
சென்னை/மும்பை: 6வது கட்ட லோக்சபா தேர்தலில் சென்னை மற்றும் மும்பை போன்ற பெருநகரவாசிகள்தான் வாக்களிக்கப் போகாமல் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்திருக்கின்றனர். தருமபுரி போன்ற பின்தங்கிய பகுதிகளில் பட்டையை கிளப்பும் வகையில் வாக்குப் பதிவு இருந்த போதும் மெத்த படித்தவர்கள் தான் வாக்குரிமையை துச்சமென தூக்கிப்
போட்டுள்ளனர்.
லோக்சபா தேர்தலில் நேற்று தென்சென்னையில் 57.86%, மத்திய சென்னையில் 60.9%, வடசென்னையில் 64.63% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. தமிழகத்தின் இதர பகுதிகளை ஒப்பிடுகையில் இந்த வாக்குப் பதிவு மிகவும் குறைவோ குறைவுதான்.
இதேபோல் மகாராஷ்டிராவின் தலைநகரான மும்பை பெருநகரத்திலும் வாக்கு பதிவு சதவீதம் படுமோசம். மும்பையில் வாக்குப் பதிவு சதவீதம் 50%யைத் தாண்டுவது என்பதே பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிற அவலம்தான் நேற்று நிகழ்ந்திருக்கிறது.
வாக்களியுங்கள்.. வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை என்றெல்லாம் திரும்பிய திசையெங்கும் தேர்தல் ஆணையத்தின் குரல்கள் எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றன.. இதில் தொலைக்காட்சிகள், ஊடகங்கள் தங்கள் பங்குக்கு ஜனநாயகக் கடமையாற்ற வாருங்கள்..வாருங்கள் என வெற்றிலைபாக்கு வைத்து அழைத்துப் பார்த்தது.
ஆனால் விளைவு.. ஒரு பயனும் இல்லையே.. தேர்தல் ஆணையத்தின் இந்த கூப்பாடு கேட்டிராத நாட்டின் குக்கிராமங்களில் கூட வாக்குப் பதிவு கணிசமாக பெருமிதம் கொள்ளத்தக்க வகையில் இருக்கிறது. ஆனால் பெருநகரவாசிகள்தான் ஜனநாயக கடமையை ஆற்றாமல் தூக்கி எறிந்திருக்கின்றனர்.
இப்படிப்பட்ட நிலைமை இனியும் நீடிக்காமல் இருக்க வேண்டுமெனில் வாக்களிக்கும் கடமையைச் செய்ய மறுப்போருக்கான சில உரிமைகளை ரத்து செய்தாக வேண்டும் என்பதுதான் ஜனநாயகவாதிகளின் கருத்தாக இருக்கிறது.
அதாவது அவர்களது வீட்டு சமையல் எரிவாயு இணைப்பை ரத்து செய்ய வேண்டும், எந்த ஒரு வரிச்சலுகையும் வழங்கக் கூடாது என்பது போன்ற சில காட்டமான நடவடிக்கைகளையும் அவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
இப்படியெல்லாம் கெடுபிடி காட்டினால்தான் வாக்களிப்பதும் நமது கடமை என்பது மெத்தப்படித்த மண்டைகளில் உரைக்கும் போல!