உ.பியில் சர்ச்சை: பார் பெண்களுடன் குத்தாட்டம் போட்ட அமைச்சரால் பரபரப்பு
சமாஜ்வாதி கட்சியின் முசாபர்நகர் எம்.எல்.ஏ.வும், அம்மாநில அமைச்சருமான சித்ரஞ்சன் ஸ்வரூப், ஓட்டல் ஒன்றில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது அங்கு நடனம் ஆடிய பார் பெண்களுடன் சேர்ந்து அமைச்சரும் ஆட்டம் போட்டுள்ளார். இது தொடர்பான படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. வடமாநில ஊடகங்களில் இதுதான் தற்போது பரபரப்பான செய்தியாக ஒளிபரப்பாகிவருகிறது.
பார் பெண்களுடன் அமைச்சர் ஆட்டம் போட்டதோடு, ரூபாய் நோட்டுக்களையும் அந்த பெண்கள் மீது அள்ளி வீசியிருக்கிறார். இதேபோல் மற்ற கட்சி தலைவர்களும், தொண்டர்களும் பார் பெண்களுடன் நடனம் ஆடியுள்ளனர். இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமாஜ்வாதி அரசு பல்வேறு சர்ச்சையில் சிக்கி உள்ளது. இந்நிலையில் அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் ஓட்டலில் பார் பெண்களுடன் நடனம் ஆடிய விவகாரம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.