அமைச்சர் வி.கே.சிங் விவகாரம்: நாடாளுமன்ற இரு அவைகளிலும் காங்கிரஸ் அமளி
டெல்லி: அமைச்சர் வி.கே.சிங்கிற்கு எதிராக அரசு தாக்கல் செய்த பிரமாணப்பத்திர விவகாரத்தால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி நிலவியது.
தற்போதைய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங், ராணுவ தளபதியாக பதவி வகித்தபோது, தனக்கு அடுத்த ரேங்கில் இருந்த தல்பிர் சிங்கிற்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருந்தார். இது உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை என்று மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் இரு நாட்களுக்கு முன்பு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது. அமைச்சருக்கு எதிராக அரசே விமர்சனம் செய்துள்ளதால் காங்கிரஸ் கட்சி இதை அரசியல் ஆயுதமாக்கியுள்ளது.
மக்களவை இன்று கூடியதும், காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுந்து நின்று அரசின் நிலைப்பாடு குறித்து விளக்கமளிக்க கோரி கோஷமிட்டனர். வி.கே.சிங்கை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. சபாநாயகர் சுமித்ரா மகாஜன், உறுப்பினர்களை அமைதிப்படுத்தினார்.
இதே பிரச்சினை ராஜ்யசபாவிலும் எதிரொலித்தது. காங்கிரசாரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து பேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் அருண்ஜெட்லி, " ஐக்கிய முற்போக்கு கூட்டணி அடுத்த ராணுவ தளபதியாக தல்பிர் சிங்கை நியமித்து சில வாரங்கள் முன்பு உத்தரவிட்டது. ராணுவ விவகாரங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். எனவே கடந்த அரசின் உத்தரவுப்படி, ராணுவ தளபதியாக தல்பிர்சிங் நியமிக்கப்படுவதையே இந்த அரசும் விரும்புகிறது. ராணுவ பிரச்சினை குறித்து அவையில் மேற்கொண்டு விவாதிப்பது சரியில்லை. இதே விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி அமைச்சர் வி.கே.சிங் மீது விமர்சனம் செய்வதும், அவர் அதை மறுத்துள்ளதும் அரசு நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டது" என்றார்.
இருப்பினும் வி.கே.சிங் குறித்த அரசின் நிலைப்பாட்டை விளக்குமாறு காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷமிட்டனர். இதற்கு அவைத்தலைவர் ஹமீத் அன்சாரி அனுமதி மறுத்து, குடியரசு தலைவர் உரைமீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசுமாறு உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார்.