தாஜ் மஹாலில் வைத்து போட்டோஷூட்.. மன்னிப்பு கேட்டது மிஸ் யுனிவர்ஸ் நிறுவனம்!
டெல்லி: காதல் சின்னமாக போற்றப்படும் தாஜ்மஹாலில் வைத்து போட்டோஷூட் நடத்தியதற்காக மிஸ் யுனிவர்ஸ் அமைப்பு மன்னிப்பு கேட்டுள்ளது.
இது தவறான செயல். இதற்காக இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக மிஸ் யுனிவர்ஸ் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் உள்நோக்கத்துடன் தாங்கள் செயல்படவில்லை என்றும் அறியாமல் நடந்த தவறு இது என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
மிஸ் யுனிவர்ஸ் ஒலிவியா
மிஸ் யுனிவர்ஸ் அழகியான ஒலிவியா கல்போ, 10 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
தாஜ்மஹாலுக்கு விசிட்
தனது இந்திய பயணத்தின் ஒரு கட்டமாக அவர் தாஜ்மஹாலுக்குச் சென்றார்.
ஷூக்கள் அணிந்து விதம் விதமான போஸ்
அப்போது ஒரு சர்வதேச நிறுவனத்தின் தயாரிப்பு ஷூவை அணிந்து கொண்டு விதம் விதமாக போஸ் கொடுத்தார். அதை பல கேமராக்கள் மூலம் படமாக்கினர்.
டயானா சீட்டில் உட்கார்ந்தபடி போஸ்
மேலும் பிரபலமான டயானா சீட் எனப்படும் மேடையிலும் அமர்ந்து போஸ் கொடுத்தார். 1992ம் ஆண்டு மறைந்த இளவரசி டயானா தாஜ்மஹாலுக்கு வந்தபோது அவர் இந்த மார்பிள் மேடையில் அமர்ந்ததால் இது டயானா சீட் என்று புகழ் பெற்றதாகும்.
போலீஸில் புகார்- வழக்கு
ஆனால், மிஸ் யுனிவர்ஸ் அழகியின் செயல் விளம்பர உள்நோக்கம் கொண்டது, காதல் சின்னமான தாஜ்மஹாலின் புனிதத்தை அவர் களங்கப்படுத்தி விட்டார் என்று தாஜ்மஹால் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
மன்னிச்சுருங்க...
இதையடுத்து மிஸ் யுனிவர்ஸ் அமைப்பு பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், தாஜ்மஹாலில் நடந்த நிகழ்வுக்காக இந்திய மக்களிடம் நாங்கள் மனப்பூர்வமாக, பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறோம்.
ரசிகர்களுக்காக...
தனது ரசிகர்களுக்கான வீடியோ ஆல்பம் ஒன்றுக்காகவே இந்த நிகழ்ச்சியில் மிஸ் யுனிவர்ஸ் அழகி ஒலிவியா கலந்து கொண்டார். இந்த வீடியோ படத்தில் இடை இடையே ஸ்பான்சர்களின் விளம்பரங்களையும் நாங்கள் சேர்க்கிறோம். அதேசமயம், இது விளம்பரப் படம் அல்ல. வணிக நோக்கில் இதை நாங்கள் தயாரிக்கவில்லை.
இருந்தாலும் மன்னிச்சிடுங்க..
இருந்தாலும், தடை செய்யப்பட்ட பகுதியில் படம் எடுத்ததற்காகவும், இந்திய மக்களின் மனதைப் புண்படுத்தியதற்காகவும் நாங்கள் மன்னிப்பு கோருகிறோம். இது வேண்டும் என்று உள்நோக்க்கத்துடன் செய்யப்பட்ட ஒன்றல்ல என்பதையும் தெளிவுபடுத்திக் கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.
சஞ்சனா ஜான் மீதும் வழக்கு
ஒலிவியா தாஜ்மஹால் சென்றபோது அவருடன் கூடவே போயிருந்த இந்திய வம்சவாளி பேஷன் டிசைனரான சஞ்சனா ஜான் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஒலிவியா, சஞ்சனா ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானால் அவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும்.