ஒட்டகங்களைக் கொல்ல தடை... தீவிர ஆலோசனையில் ராஜஸ்தான் அரசு!
டெல்லி: பாலைவன கப்பல் எனப் போற்றப்படும் ஒட்டகங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையாக அவற்றைக் கொல்ல தடை விதிப்பது குறித்து ராஜஸ்தான் அரசு பரிசீலனை செய்து வருகிறது.
இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒட்டகங்களின் பயன்பாடு அதிகம். ஆனால், கடந்த சில வருடங்களாக அங்கு ஒட்டகங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது. எனவே, ஒட்டகங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது அம்மாநில அரசு.
புனித விலங்காகக் கருதப்படும் பசுக்களை கொல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையைப் போல, ஒட்டகங்களைக் கொல்லவும் தடை விதிக்கப் பட உள்ளது. மேலும் ஒட்டகங்களை பாதுகாக்க தனி அமைச்சகம் உருவாக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
பாதுகாக்கப்பட்ட விலங்கு...
இதன் முதல் கட்டமாக ஒட்டகத்தை ‘‘பாதுகாக்கப்பட்ட விலங்கு'' என்று அறிவிக்க முடிவு செய்துள்ளனர்.
2வது மாநில விலங்கு...
சமீபத்தில் ராஜஸ்தானின் இரண்டாவது மாநில விலங்கு என்ற அந்தஸ்தை அம்மாநில அரசு ஒட்டகத்திற்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
கணக்கெடுப்பு...
ராஜஸ்தானில் ஒட்டகங்கள் பற்றிய கணக்கெடுப்பு 5 ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில், கடைசியாக 2012-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் ராஜஸ்தானில் 3.26 லட்சம் ஒட்டகங்களே இருப்பதாக தெரிய வந்துள்ளது.
குறைந்த எண்ணிக்கை...
இது கடந்த 2007ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு எண்ணிக்கையை விடக் குறைவாகும். ஏனெனில் அப்போது 4.5 லட்சம் ஒட்டகங்கள் இருப்பதாகக் கூறப்பட்டது.
பயன்பாடு குறைவு...
விவசாயம் மற்றும் போக்குவரத்திற்கு ஒட்டகங்களின் பயன்பாடு குறைந்துள்ளதே இந்த எண்ணிக்கை குறைவிற்குக் காரணம் எனச் சொல்லப் படுகிறது.
பொருளாதார வளர்ச்சி...
மேலும், ஒட்டகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வதன் மூலம் மாநில பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தலாம் என அம்மாநில அதிகாரிகள் கருதுகிறார்களாம்.