குஜராத் படுகொலைகளுக்கு மன்னிப்பு கேட்பீர்களா?: மழுப்பும் நரேந்திர மோடி!
அகமதாபாத்: குஜராத் படுகொலைகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருவது குறித்து நேரடியாக எந்த ஒரு பதிலையும் தெரிவிக்காமல் அப்படி ஒரு மழுப்பலான பதிலளித்துள்ளார் அம்மாநில முதல்வரும் பாரதிய ஜனதாவின் வேட்பாளருமான நரேந்திர மோடி.
நரேந்திர மோடி பொதுவாக ஊடகங்களை எதிர்கொள்வதில்லை. வழக்கமான பொதுக்கூட்டங்களைத் தவிர ஒன்றிரண்டு தொலைக்காட்சிகளுக்குத்தான் பேட்டி கொடுத்திருக்கிறார்.
அண்மையில் டிவி9 தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், குஜராத் படுகொலைகளுக்கு மன்னிப்பு கேட்பீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த மோடி, எந்த ஒரு காங்கிரசாரும் என்னை வந்து சந்திக்கவில்லை அல்லது அவர்கள் இதுபற்றி பேசவும் இல்லையே..காங்கிரசார் முதலில் தங்களது பாவங்களுக்கு பரிகாரம் தேடட்டும் என்று மட்டும் கூறியுள்ளார்.
என்னது மன்மோகன் பேசினாரா?
அதேபோல் பிரதமர் மன்மோகன்சிங், நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர், மோடி நாட்டுக்கு ஆபத்தானவர் என்று கூறியுள்ளனரே என்ற கேள்விக்கும் கூட, கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மன்மோகன்சிங் இந்த மாதிரி பேசி நான் கேட்டது இல்லை என்று பதுங்கியபடி பதிலளித்திருக்கிறார். மேலும் அப்படி ஒரு அபாயகரமானவனாக இருந்தால் தெருவில் யாரும் இத்தனை ஆண்டுகாலம் வாழ்ந்திருக்க முடியாது என்றும் கேட்டிருக்கிறார்.
மோடி அலை வீசலை..
மோடி அலைவீசுகிறதா? என்ற கேள்விக்கு "மோடி அலை வீசவில்லை.. பாஜக அலைதான் வீசுகிறது.. பாஜகவை விட மோடி பெரிய ஆள் அல்ல என்று கூறியுள்ளார். நடப்பு லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 300 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்றும் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
அத்வானி, முரளிமனோகர் ஜோஷி ஆகியோருக்கு லோக்சபா சீட் ஒதுக்குவதில் ஏற்பட்ட சிக்கல் குறித்த கேள்விக்கு, நான் ஒன்றும் சீட் ஒதுக்குவது பற்றி முடிவெடுக்கவில்லையே என்று கூறியிருக்கிறார்.