இந்தியாவின் புதினாக உருவெடுக்கும் மோடி- பாகிஸ்தான், மேற்கு நாடுகள் அச்சம்!!
டெல்லி: ரஷியாவின் புதினைப் போல இந்தியாவில் நரேந்திர மோடி உருவெடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டு பாகிஸ்தானும் இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும் அலறிக் கொண்டிருக்கின்றன என்கிறார்கள் பாதுகாப்பு வல்லுனர்கள்.
நாட்டின் 16வது லோக்சபா தேர்தல் முக்கால் கிணறு தாண்டிய கதையாகிவிட்டது. இன்னும் 2 கட்ட வாக்குப் பதிவுதான் இருக்கிறது. ஆனாலும் பெரும்பாலான கருத்து கணிப்புகள் வழக்கம் போல நரேந்திர மோடிதான் அடுத்த பிரதமராவார் என்று கூறி வருகின்றன.
அவர் பிரதமர் ஆவாரா, அல்லது அது வெறும் கனவாகவே இருந்து கலைந்து போகுமா என்பது ஒரு பக்கம் இருந்தாலும் மோடியைக் கண்டு பாகிஸ்தானும் மேற்கத்திய நாடுகளும் அலற ஆரம்பித்துள்ளன என்கிறார்கள்.
எக்கனாமிஸ்ட் பத்திரிகை
இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் தி எக்கனாமிஸ்ட் பத்திரிகை அண்மையில் மோடி குறித்த ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. அதில் இந்தியாவின் பிரதமராக ராகுல் காந்தியைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறியிருந்தது. இதைச் சுட்டிக்காட்டும் சில இந்திய பாதுகாப்பு வல்லுனர்கள், இந்தியாவை விட்டு போய் 65 ஆண்டுகாலம் ஆகிவிட்ட பின்னரும் இங்கிலாந்துவுக்கு இந்தியா மீது எவ்வளவு கரிசனை பாருங்கள் என்று சாடுகின்றனர்.
அத்துடன் 65 ஆண்டுகாலத்துக்கு முன்னர் இந்தியாவில் புதிய ஆட்சியாளரை உருவாக்கியதைப் போல இப்போதும் உருவாக்க நினைக்கிறது இங்கிலாந்து என்கின்றனர்.
அலறும் பாகிஸ்தான்..
அதேபோல்தான் பாகிஸ்தானின் செயல்பாட்டை முன்வைத்து கடுமையாக விமர்சிக்கின்றனர் மோடி தரப்பினர். தாவூத் இப்ராஹிமை இந்தியாவுக்கு கொண்டு வருவோம் என்பதுதான் மோடியின் பேச்சு... மோடியின் பேச்சுக்கு பாகிஸ்தானின் அமைச்சர் பதிலடி கொடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவ தளபதியும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார்.
மோடியைவிட ஐமு அரசுதான்..
பாகிஸ்தானைப் பொறுத்தவரையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான் தோதான ஒன்றாக இருக்கும்.. மோடி தலைமையில் ஒரு அரசு உருவானால் அதன் கொள்கைகள் காட்டமாகவே இருக்கும் என்பதுதான் பாகிஸ்தானுடையதாக நிலையாக சொல்லப்படுகிறது.
புதினைப் போல..
அதாவது கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சோவியத் ரஷ்யா உடைந்து போய் பொருளாதாரத்தில் பலவீனமான நிலையில் ரஷ்யாவின் அதிபராக வந்தார் புதின். அதன் பின்னர் அவர் அந்த நாட்டை மீட்டு, இப்போது உக்ரைன், கிரிமியா விவகாரங்களில் மேற்கத்திய நாடுகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறார்.
அப்படி ஒரு புதினாக இந்தியாவில் உருவெடுத்துக் கொண்டிருக்கிறார் மோடி என்றதீரியில் தான் அவரை மேற்கு நாடுகளும் பாகிஸ்தானும் இப்போதே பார்க்க ஆரம்பித்திருக்கின்றன என்கின்றனர் இந்த பாதுகாப்பு வல்லுனர்கள்.