வாரணாசியில் நரேந்திர மோடி இன்று வேட்புமனு தாக்கல்
வாரணாசி: பாஜக பிரதமர் பதவிக்கான வேட்பாளர் நரேந்திரமோடி இன்று வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திரமோடி, குஜராத் மாநிலம் வதோதராவிலும், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியிலும் போட்டியிடுகிறார். இதையடுத்து அவர் ஏற்கனவே வதோதரா தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்துவிட்டார்.
இந்நிலையில், இன்று உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசியில் அவர் வேட்பு மனுதாக்கல் செய்கிறார். இதற்காக அவர் இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் வாரணாசி வருகிறார். அங்கிருந்து கார் மூலம் ஊர்வலமாக சென்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.
மோடி ஊர்வலமாக வரும்போது, அவர் மீது மலர் தூவி வரவேற்பு கொடுக்க பா.ஜ.க. தொண்டர்கள் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து போட்டியிடுவதாக அறிவித்த ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் நேற்று மனுத்தாக்கல் செய்தார்.