வங்கிக்கணக்கு துவங்குவதால் நிதித்தீண்டாமை ஒழியும்: பிரதமர் மோடி
டெல்லி: நிதி தீண்டாமையை அகற்றவே அனைவருக்கும் வங்கி கணக்கு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், ‘பிரதான் மந்திரி ஜன்-தான் யோஜனா' (பிரதமர் மக்கள்-நிதி திட்டம்) என்ற திட்டத்தை பற்றி அறிவித்தார்.
நாட்டில் உள்ள அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்குவதை இத்திட்டம் நோக்கமாக கொண்டது. இத்திட்டத்தை இன்று டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
இன்றே இத்திட்டம் நாடு முழுவதும் தொடங்கி வைக்கப்பட்டது. திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி; நிதி தீண்டாமையை அகற்றவே அனைவருக்கும் வங்கி கணக்கு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து பேசிய அவர்,
வங்கி கணக்கு வைத்திருப்பது முக்கிய பாதுகாப்பு அம்சம் ஆகும்.
பெண்களுக்கு நிதி அதிகாரம் அளிப்பதில் வங்கி கணக்குகள் முக்கிய பங்காற்றும்.'ஜன்-தான் யோஜனா' திட்டத்தின் கீழ் இன்று 1.5. கோடி வங்கி கணக்கு பெறுபவர்கள் காப்பீடு அம்சமும் பெறுவார்கள்.
நாடு விடுதலை பெற்று 68 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் 68 சதவீதம் மக்கள் வங்கி சேவையில் இணைவில்லை. ஏழ்மையை விரட்ட, நிதி தீண்டாமைக்கு முடிவுகட்ட வேண்டிய தேவை நமக்கு ஏற்பட்டுள்ளது.
அதிக புதிய கிளைகள் திறக்கப்படும், அதனால் வேலை வாய்ப்புகள் உருவாகும். இத்திட்டத்தினை முன்னெடுத்து செல்ல புதிய உள்கட்டமைப்பு அமைக்கப்படும். தபால் அலுவலக உள்கட்டமைப்பு வசதிகள் வங்கி துறையில் பயன்படுத்தப்படும்.
இந்த முழு திட்டமும் ஏழைகளுக்கானது. ஏழ்மையை இந்தியாவை விட்டு விரட்டும் நடவடிக்கையாகும். வங்கி கணக்கு தொடங்குபவர்கள் ஜனவரி 26ம் தேதிக்கு ரூ. 30 ஆயிரம் காப்பீடு பெறுவார்கள். சேமிப்பு என்பதே நமது நாட்டின் இயல்பு. நாம் கடன் அட்டைகள் சார்ந்து இல்லை என்று கூறினார்.