அமெரிக்காவில் விரதம் இருக்கப் போகும் நரேந்திர மோடி!
டெல்லி: நவராத்திரி விரதகாலத்தில் அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி அங்கு வெறும் எலுமிச்சை பழச்சாறும், பழங்களும் மட்டும் உண்டு விரதம் மேற்கொள்வார் என்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு நவராத்திரி விழா 25ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 3ஆம் தேதி முடிவடைகிறது. இந்த நேரத்தில் தான், பிரதமர் மோடியின் அமெரிக்க பயணமும் அமைந்திருக்கிறது. தனது அமெரிக்க பயணத்தின் போது ஒபாமா 29-ந் தேதி அளிக்கும் விருந்து நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.
இதனால் பிரதமர் மோடி தனது நவராத்திரி விரதத்தை கைவிடுவாரா? என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து டெல்லியில் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் கூறுகையில், பிரதமரின் அலுவல்பூர்வமான அமெரிக்க பயணத்தின்போது, நிகழ்ச்சி நிரல்கள் எதிலும் அவருடைய நவராத்திரி விரதம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று தெரிவித்தன.
இதனால் மோடி அமெரிக்காவில் தங்கியிருக்கும்போது எப்போதும் போல் தனது நவராத்திரி விரதத்தை தொடர்வார் என்பதும், இதற்கு இந்த ஆண்டும் விதிவிலக்கு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
மோடியின் அமெரிக்க பயணம்
பிரதமர் நரேந்திர மோடி வரும் 29ம் தேதி, வாஷிங்டன் செல்லும் போது, அமெரிக்க அதிபரின் விருந்தினர் இல்லமான, 190 ஆண்டு பழமையான 'பிளேர் ஹவுசில்' தங்குகிறார்.
வாஜ்பாய்க்கு அடுத்தபடியாக
வாஜ்பாய்க்கு அடுத்தபடியாக, பிளேர் ஹவுசில் தங்க உள்ள இந்திய பிரதமர், மோடியே.கடந்த, 1824ம் ஆண்டு கட்டப்பட்ட பிளேர் ஹவுஸ், 190 ஆண்டுகளில், அமெரிக்காவின் அரசியல், தூதரக மற்றும் கலாசார வரலாற்றில், மிக முக்கியமான இடம் பெற்றுள்ளது.
விருந்தினர் இல்லம்
அமெரிக்க அதிபரின் அங்கீகரிக்கப்பட்ட விருந்தினர் இல்லமான பிளேர் ஹவுசில், பாரம்பரியமாக, அவர் விருந்தினர்கள் எல்லாம் தங்குவர். தனியொரு நபரின் வீடாக இருந்த இந்த பிளேர் ஹவுஸ், இரண்டாம் உலகப் போரின் போது, அமெரிக்க அரசால் வாங்கப்பட்டது.
மன்மோகன் தங்கியதில்லை
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், பிரதமராக இருந்த மன்மோகன் சிங், பலமுறை அமெரிக்கப் பயணம் மேற்கொண்டும், ஒரு போதும் பிளேர் ஹவுசில் தங்கியதில்லை. மாறாக ஓட்டல்களிலேயே தங்கி உள்ளார்.
உலக வர்த்தக மையக்கட்டிடம்
வரும், 26ம் தேதி மதியம், அமெரிக்காவின் நியூயார்க் நகர் சென்றடையும் மோடி, அங்குள்ள பேலஸ் ஹோட்டலில் தங்குகிறார்.மறுநாள், பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்ட உலக வர்த்தக மைய கட்டடங்கள் இருந்த இடத்தையும், அந்தத் தாக்குதலில் இறந்தவர்களின் நினைவாக கட்டப்பட்டுள்ள, நினைவக அருங்காட்சியகத்தையும் பார்வையிடுகிறார்.
ஐ.நா.சபையில் உரை
பின், ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்திர கூட்டத்தில் உரை நிகழ்த்தும் மோடி, தொடர்ந்து, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா உட்பட, சில நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசுகிறார். 28ம் தேதி, ஆயிரக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் பேசுகிறார். யூத மக்களின் பிரதிநிதிகளையும் சந்திக்கிறார்.
ஒபாமா விருந்தில்
வரும், 29ம் தேதி, நியூயார்க்கிலிருந்து வாஷிங்டன் செல்லும் மோடிக்கு, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா விருந்தளிக்கிறார். அப்போது, இருவரும், முதல் முறையாக நேரடியாக பேசுகின்றனர். மறுநாள், இரு நாட்டு பிரதிநிதிகள் தலைமையிலான பேச்சு நடக்கிறது.
மோடிக்கு விருந்து
30ம் தேதி, அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடன், பிரதமர் மோடிக்கு விருந்தளிக்கிறார். தொடர்ந்து, அமெரிக்க எம்.பி.,க்களையும், அமெரிக்க வர்த்தக பிரமுகர்களையும் சந்தித்துப் பேசுகிறார். இதன்பின், நாடு திரும்புகிறார்.
நவராத்திரி விரதம்
ஒவ்வொரு ஆண்டும் மேற்கொள்ளும் நவராத்திரி விரதத்தை, அமெரிக்க பயணத்தின் போதும், பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்வார். 'அதில் எந்த மாற்றமும் இல்லை' என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
9 நாட்கள் விரதம்
வரும், 25ம் தேதி முதல், அக்டோபர், 3ம் தேதி வரை, ஒன்பது நாட்களுக்கு நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழாவின் போது, ஒன்பது நாட்களும், பிரதமர் நரேந்திர மோடி விரதம் இருப்பார்.
விரதம் கடைபிடிப்பாரா?
வரும், 26ம் தேதி முதல், ஆறு நாட்கள் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்கிறார் மோடி. அதனால், ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கும் நவராத்திரி விரதத்தை, அவர் இந்தாண்டு மேற்கொள்வாரா என்ற சந்தேகம் எழுந்தது.
பழங்கள், எலுமிச்சை ஜூஸ்
ஆனால் அமெரிக்கப் பயணத்தின் போதும், நவராத்திரி விரதத்தை, பிரதமர் மோடி தொடர்வார். அந்த நாட்களில், பழங்கள் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த தண்ணீர் அருந்துவார்.
விரதத்தால் பாதிப்பில்லை
அமெரிக்க அதிபர் ஒபாமா அளிக்கும் விருந்து உட்பட, பல நிகழ்ச்சிகளிலும், அவர் இவற்றையே சாப்பிடுவார். மோடியின் விரதத்தால், அவரின் நிகழ்ச்சிகள் எதுவும் பாதிக்கப்படாது.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
40 ஆண்டுகால விரதம்
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக நவராத்திரி விரதம் இருந்து வருகிறார். இந்த முறையும் நவராத்திரி விரதம் இருக்கும் நேரத்தில் அவருக்கு அமெரிக்க பயணம் குறுக்கிடுகிறது.
இந்திய சமூகத்தினர் ஏமாற்றம்
இந்த பயணம் முழுவதும் அவர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் விருந்து உபசாரங்களில் அவர் நீராகாரம் மட்டுமே எடுத்துக் கொள்வதால் மோடிக்காக பெரும் அளவில் விருந்து உபசாரங்களுக்கு திட்டமிட்டுள்ள இந்திய சமூகத்தினர் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.