பீகாரில் மோடி பிரசாரம்: மாவோயிஸ்டுகள் முழு அடைப்பு- மொபைல் டவர்கள் தகர்ப்பு!
ராஞ்சி: பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று பிரசாரம் மேற்கொள்ளும் நிலையில் பீகார் மாநிலத்தின் கயா மாவட்டத்தில் 2 இடங்களில் மொபைல் டவர்களை மாவோயிஸ்டுகள் தகர்த்துள்ளதால் பதற்றம் நீடித்து வருகிறது.
லோக்சபா தேர்தலையொட்டி நாடு முழுவதும் நரேந்திர மோடி தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார். அவர் இன்று ஜார்க்கண்ட் மாநிலத்தின் லோஹார்டாகா, சட்ரா மற்றும் பீகாரின் சாசரம், கயா தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
அதே நேரத்தில் தமது இயக்க போராளிகள் 10 பேர் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கயா பகுதியில் மாவோயிஸ்டுகளும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கின்றனர். இந்நிலையில் கயா மாவட்டத்தில் 2 இடங்களில் செல்போன் டவர்களை மாவோயிஸ்டுகள் தகர்த்திருக்கின்றனர்.
இதனால் அங்கு பதற்றம் நீடித்து வருகிறது. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.