ஆளே இல்லாத கடையில் எதுக்கு டீ ஆத்தனும்.. மோடி டீக்கடை பிரசாரம் ரத்து!
அகமதாபாத்: நரேந்திர மோடியின் டீக்கடை பிரசாரத்திற்கு சரிவர ஆதரவு இல்லை என்பதால் அதைத் தூக்கிப் போட்டு விட்டது பாஜக.
காங்கிரஸ்காரர்கள் மோடியை டீ விற்றவர் எப்படி பிரதமர் பதவிக்கு ஆசைப்படலாம் என்றுகேட்கப் போய் டீ கேத்தலைத் தூக்கிக் கொண்டு கிளம்பி விட்டனர் பாஜகவினர்.
ஊர் ஊராக டீக்கடைகலில் பிராசரம், டீக்கடை திறப்பு, நமோ டீ விற்பனை என்று அதகளப்படுத்தினர். அதற்கும் மேலே ஒரு படி போய் மோடியே டீக்கடை முன்பு உட்கார்ந்து பேசி அமர்க்களப்படுத்தினார்.
ஆனால் இப்போது மோடி டீக்கடைப் பிரசாரத்தை பாஜக கைவிட்டு விட்டதாம்.
டீ குடித்துக் கொண்டே மோடியுடன் கதைப்பு
டீ குடித்துக் கொண்டே மோடி மக்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தது பா.ஜ. க.
1500 இடங்களில் 300 நகரங்களில் முதல் போணி
முதலில் இதை 300 நகரங்களில் 1500 இடங்களில் நேரடியாக ஒளிபரப்பி அசத்தினர்.
டெக்னிக்கல் டீ
டிடிஎச், செயற்கைக் கோள், இன்டர்நெட், செல்போன், பேஸ் புக் என பலவிதமான டெக்னிக்கல் மேட்டர்களை இதற்காகப் பயன்படுத்தினர்.
2 கோடி பேரை கவர
இப்படியே ஐந்து நாட்களுக்கு ஒருமுறை டீக்கடை பெஞ்ச்சில் அமர்ந்து 2 கோடி பேர் வரை டீ கூட்டத்தை நடத்த இலக்கும் நிர்ணயிக்கப்பட்டது.
3 கூட்டத்தோடு கடை மூடல்
ஆனால் இதுவரை 3 கூட்டங்களை மட்டுமே நடத்தியுள்ளனர். மறுபடியும் கூட்டம் எதுவும் நடப்பதாக தெரியவில்லை.
மக்கள் டேஸ்ட் மாறிப் போச்சோ
மக்களிடையே இந்த டீக்கடை கூட்டங்களுக்கு ஆதரவு கிளம்பாததால் கூட்டங்களை பாஜக சத்தம் போடாமல் கைவிட்டு வி்ட்டதாக கூறுகிறார்கள்.
அது சரி ஆளே இல்லாத டீக்கடையில் எத்தனை நாளைக்குத்தான் டீ ஆத்துறது...