மோடியின் அமெரிக்க பயணத்தால் முன்னேற்றமில்லை... ஏமாற்றம் தான்: காங்கிரஸ்
டெல்லி: மோடியின் அமெரிக்கப் பயணத்தால் நாட்டுக்கு என்ன பலன் ஏற்பட்டுள்ளது என்று தெரியவில்லை. இது ஏமாற்றமளிப்பதாக கருத்துத் தெரிவித்துள்ளது காங்கிரஸ்.
ஐந்து நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள மோடி, ஐ.நா. பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் விருந்தில் கலந்து கொண்டார். இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட சில நாட்டுத் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில், மோடியின் அமெரிக்கப் பயணம் குறித்து டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார் காங்கிரஸ் கட்சி செய்தித்தொடர்பாளர் ஆனந்த் சர்மா.
அப்போது அவர் கூறியதாவது :-
மோடியின் அமெரிக்க பயணத்தால், பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எல்லாரும் எதிர்பார்த்த நிலையில், ஏமாற்றமே மிஞசியிருந்தது. பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் பயங்கரவாதம் குறித்த விவகாரத்தில் குறிப்பிடத்தக்க வகையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெறவில்லை. எவ்வித முன்னேற்றமுமில்லாத இப்பயணம் ஏமாற்றளிப்பதாக அமைந்துள்ளது.
பெரும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திய மோடியின் நியூயார்க் பேச்சு சியர் லீடர்களை வைத்துக் கொண்டு விளையாடியதைப் போலத்தான் இருந்தது. இதற்கு முந்தைய இந்திய அரசுகளை சிறுமைப்படுத்தும் வகையிலும், அவமானப்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டுள்ளார் மோடி. இது கவலைக்குரியது என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.