அம்மா சொல்ற பொண்ணைத் தான் கட்டிக்குவேன்... அடம் பிடிக்கும் இந்தியர்கள் !!
டெல்லி: சமீபத்திய ஆய்வு ஒன்றின் படி அறுபது சதவீத இந்தியர்கள் பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணங்களையே விரும்புவதாக தெரிய வந்துள்ளது.
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுவதாகவும், பிறக்கும் போதே இன்னார்க்கு இன்னாரென்று கடவுள் எழுதி வைத்தது எனக் கூறப்படுவதுண்டு. ஆனால், பெரும்பாலும் திருமணங்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் அல்லது காதல் திருமணங்களாகத் தான் அமைகின்றன.
அதிலும் சமீபகாலமாக இந்தியாவில் காதல் திருமணங்கள் அதிகரித்து வருவதாக பரவலான கருத்து உள்ளது. ஆனால், அதனை பொய்யாக்கும் வகையில் பெரும்பாலான இந்தியர்கள் பெற்றோர்கள் பார்த்து சேர்த்து வைக்கும் திருமணங்களையே விரும்புவதாக ஆய்வு ஒன்று கூறுகின்றது.
600 தம்பதிகள்...
இந்தியாவின் முக்கிய நகரக்கள் சிலவற்றில் வாழும் 600 தம்பதிகளிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வை ட்ரூலி மேட்லி.காம் என்ற இணையதளம் ஏற்பாடு செய்திருந்தது.
பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டது...
அந்த ஆய்வின் படி சுமார் 69 சதவீத திருமணங்கள் பெற்றோரால் பார்த்து நடத்தப்பட்டது என்றும், மீதமுள்ள 31 சதவீத திருமணங்கள் மட்டுமே காதல் திருமணங்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
காலங்கள் மாறினாலும்...
பழங்காலத்தைப் போலவே பெற்றோர் பார்த்து வைக்கும் வரன்களையே திருமணம் செய்து கொள்ள தற்போதைய மக்களும் விரும்புவதாகவும் ஆய்வை நடத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.
காதல் திருமணங்கள்...
ஆனபோதும், கடந்த காலத்தைக் காட்டிலும் தற்போதைய இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் காதல் திருமணத்தின் மீதும் ஆர்வமாக உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.